பிக்பாஸ் ஷோ டைம் வேஸ்ட்! சீரியல் பார்த்தா கூட சுகர் வருமாம்! நடிகை ராதிகா கலகல பேச்சு
வேலூர்: பிக்பாஸ் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என நடிகை ராதிகா சரத்குமார் இளம்பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அவர் குத்துவிளக்கேற்றி இந்த விழாவை தொடங்கி வைத்தார். செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நீரிழிவு நோய் விழிப்புணர்வு கையேட்டினை ராதிகா வெளியிட்டு பேசினார்.
அவர் பேசுகையில், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பற்றி மருத்துவர்கள் பேசிவிட்டார்கள். சீரியல் பார்த்தாலும் நீரிழிவு நோய் வந்துவிடும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்ல சீரியலாக இருந்தாலும் கெட்ட சீரியலாக இருந்தாலும் நீரிழிவு வருமாம். நமது வாழ்வியலும் இதற்கு காரணம்.
இப்போது நம்முடைய வாழ்வியல் முறை நமக்கு பழக்கமில்லாத ஒன்றுதான். ஆனால் திடீரென ஏற்படுத்திக் கொண்ட ஒன்று அது. சர்க்கரை நோய் வராமல் தடுக்க ஒரு மருந்து கொடுக்கிறோம். அதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது என்றார்கள். அந்த மருந்தின் விலை மிகவும் அதிகம்.
அதன் விலை 300 டாலர்களாக இருந்தது. சரி காரில் உட்கார்ந்து கொண்டு அந்த மருந்தில் என்னவெல்லாம் இருக்கிறது என பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. அதில் வேப்பிலையை மருந்தாக பதப்படுத்தியுள்ளார்கள். வேப்பிலை நம் வீட்டிலேயே இருக்கும். இதை 300 டாலர் கொடுத்து வாங்கிவிட்டேன். ஆனால் எனக்கு அது நல்ல பலனை அளித்தது.
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்போமே, அது போல் எல்லார் வீடுகளிலும் வேப்பிலை இருக்கிறது. ஆனால் அதை நான் காசு கொடுத்து வாங்கினேன். நம்மிடம் இருக்கும் வேப்பிலையை வெளிநாட்டினர் கொண்டு போய் நமக்கு அதன் மகத்துவத்தை சொல்லிக் கொடுத்ததை பார்த்து நான் வியந்து போனேன்.
ஆனால் இன்னிக்கு போனில் பிக்பாஸ் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நேற்று விமான நிலையத்தில் செக்கிங்கிற்காக காத்திருந்தேன். அப்போது அங்கிருந்த பெண், வெயிட் வெயிட் என கூறிவிட்டு போனையே பார்த்துக் கொண்டிருந்தார். நானும் என்னதான் பார்க்கிறார் என பார்த்தால் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனே நான் பிக்பாஸில் என்ன நடக்கும்னு நான் சொல்றேன், இரண்டு பேர் அடிச்சிக்குவாங்க, சண்டை போடுவாங்க, கண்ணாபிண்ணானு திட்டிக்குவாங்க, அதை நானே சொல்றேன், வாம்மானு கூப்பிட்டேன். இதெல்லாம் பொழுதுப்போக்குதான் , எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். முதலில் நம் உடல்நலனை பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போதெல்லாம் தேர்தலுக்காக நாங்கள் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தோம். அதற்கு பதிலாக உடல்நலனை பாதுகாப்பது குறித்து பிரச்சாரம் செய்திருந்தால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்திருப்பார்கள். உங்கள் உடலை பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு முக்கியத்துவத்தை கொடுங்கள் என ராதிகா பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications