ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி.. கரு கலைந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது: வேலூர் கலெக்டர்
வேலூர்: கோவை - திருப்பதி பயணிகள் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணியான இளம்பெண் திருப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். இவர், தனது சொந்த ஊரான சித்தூருக்கு மருத்துவ பரிசோதனைக்காக பிப்ரவரி 6 ஆம் தேதி புறப்பட்டுள்ளார். கோவை - திருப்பதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குப் புறப்பட்ட அவர் மகளிர் பெட்டியில் சென்றுள்ளார். ஜோலார்பேட்டை அருகே சென்றபோது மகளிர் பெட்டியில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார்.

அப்போது, அந்த சமயத்தில் மகளிர் பெட்டியில் பயணித்த அனைவரும் அந்த நிறுத்தத்தில் இறங்கிய நிலையில் கர்ப்பிணிப் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். ரயிலில் ஏறிய இளைஞர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அச்சமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக ரயிலின் செயினை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளார்.
அந்த நபர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கர்ப்பிணி பெண் கூச்சலிட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுள்ளார். ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டதோடு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் ஹேமராஜ் என்பதும், அவர் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஹேமராஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத் துடிப்பு நின்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் சிசுவை அகற்றுவதற்கான சிகிச்சை நடைபெற்றது.
அப்பெண்ணின் இடது கால், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. வலது கையில் மட்டும் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு இடது கால் முட்டி, அதே காலில் இன்னொரு பகுதி, வலது கை, முதுகு தண்டுவடம் என 4 அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே வயிற்றில் சிசு இருந்ததால் அவருக்கு சிறுநீரகத் தொற்று இருந்தது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டதில் இருந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அறுவை சிகிச்சை காரணமாகவும் அவருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது.
மேலும், அப்பெண்ணின் ஹீமோகுளோபின் அளவு மிக குறைந்த அளவே இருப்பதால் தொடர் கண்காணிப்பிலும், உயர் சிகிச்சையிலும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போது அவருடைய உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications