வேலூர் வங்கியில் தங்க நகை அடகு.. ஒரு நிமிட தவறால்.. 22 லட்சத்தை பறிகொடுத்த நகை மதிப்பீட்டாளர்
வேலூர்: போலி நகைகளை அடகு வைத்து ரூ.22 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் புகார் அளித்தார். போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப தராத காரணத்தால், நகை மதிப்பீட்டாளர்,அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி 22 லட்சத்தை வங்கியில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நகையை அடகு வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதருமாறு தற்போது நகை மதிப்பீட்டாளர் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்களை வழங்கினார்கள். அந்த வகையில் வேலூர் அருகே உள்ள ஒடுகத்தூரில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் மனு ஒன்றை எஸ்பியிடம் அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறுகையில், " ஐயா, நான் கடந்த 25 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராக பணி செய்து வருகிறேன். ஒடுக்கத்தூரில் உள்ள எங்கள் வங்கியின் வாடிக்கையாளராக உள்ள கொட்டாவூரை சேர்ந்த ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 490 கிராம் நகைகளை வைத்து ரூ.22 லட்சம் வரை கடன் பெற்றார். கடந்த மார்ச் மாதம் வங்கியில் தணிக்கை செய்தபோது அவர் அடகு வைத்த நகைகள் அனைத்தும் போலி நகைகள் என்பதை கண்டேன்.
அடமானம் வைத்தபோது பரிசோதனை செய்ததில் அவை சரியாக இருந்தது. ஆனால் ஒரு வளையலை உடைத்து சோதனை செய்தபோது தான் அந்த நகை போலியானது என்பது தெரிந்தது. தொடர்ந்து வங்கியின் மேலாளர் வற்புறுத்தலின்பேரில் ரூ.22 லட்சத்தை நான் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி கொடுத்தேன்.
சம்பந்தப்பட்ட நபர் போலி நகையை அடகு வைத்ததாக எங்கள் வங்கியில் எழுதிக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி தருவதாக வங்கி மேலாளர் உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை வங்கி மேலாளர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை மட்டுமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கி கொடுத்தார். மீதி பணத்தை வாங்கி தரவில்லை. இந்த மனுவை விசாரித்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications