திண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீர் தீ - 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
திண்டுக்கல்/வேலூர்: தமிழகத்தில் இன்று திண்டுக்கல், வேலூரில் ஓடும் கார்களில் திடீரென தீப்பிடித்தன. இதில் 7 பேர் உயிர் தப்பினர்.
வேலூர்மாவட்டம், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கசாவடி அமைந்துள்ளது. இதன் வழியாக சென்னை ஆவடியை சேர்ந்த பேக்கரி கடை உரிமையாளர் சக்கரபாணி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள தனது அண்ணன் கிருஷ்ணசாமியின் மனைவி பிரசன்ன லட்சுமி இறந்ததால் அவரின் இறுதி நிகழ்வுக்கு கலந்துகொள்ள அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.
காரில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 5 பேர் பயணம் செய்தனர். பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவிட்டு சுங்கச்சாவடியை காரில் கடக்க முற்படும் போது காரில் புகை வந்தது.

இதனால் உடனடியாக சக்கரபாணி குடும்பத்தினர் காரிலிருந்து கீழே இறங்கினர். அப்போது கார் மளமளவென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனால் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தவலறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுபடுத்தினார்கள். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. கார் தீப்பற்றி எரிந்தது குறித்து பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் இன்று பிற்பகல் திடீரென ஓடும் காரில் மளமளவென தீ பிடித்தது. காரில் இருந்த 2 பேர் கீழே இறங்கி உயிர் தப்பினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து வந்து அணைத்தனர்.












Click it and Unblock the Notifications