திருப்பத்தூர் அரசு பஸ் டிரைவர் செய்த காரியம்.. மனைவி எடுத்த முடிவால் அலறிய ஊர்.. பின்னணியில் பகீர்
வேலூர்: திருப்பத்தூர் அருகே அரசு பஸ் டிரைவராக பணியாற்றும் கணவர் மது குடிக்க பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மனைவியின் மரணத்திற்கு பின் உறவினர்களுடன் தகராறு செய்த ஓய்வுபெற்ற பெண் எஸ்ஐ-யை போலீசார் கைது செய்துள்ளனர்.. 2 குழந்தைகளை விட்டு ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பேசுபொருளாக மாறி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாத்தூர்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்.. 54 வயதான இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.. இவருடைய மனைவி பூர்ணிமா.

திருப்பத்தூர் பூர்ணிமா
34 வயதான பூர்ணிமா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.. இந்த தம்பதிக்கு ஸ்ரீமா என்ற மகளும், சவின் என்ற மகனும் உள்ளனர்.. மகாலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதனால் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து பூர்ணிமாவிடம் பணம் கேட்டு அடித்து உதைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே மகாலிங்கத்தின் குடி பழக்கத்திற்காக பூர்ணிமாவின் பெற்றோர் பலரிடம் வட்டிக்கு கைமாற்றாக கடன் வாங்கி 5 லட்சம் ரூபாய் வரை மகாலிங்கத்திடம் கொடுத்துள்ளனர்.. ஆனாலும் மகாலிங்கம் திருந்தாமல் தொடர்ந்து பூர்ணிமாவை பணத்திற்காக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசு பஸ் டிரைவர்
கணவரின் தொடர் தொந்தரவு மற்றும் கடன் சுமையால் பூர்ணிமா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. இந்த நிலையில், கடந்த 30ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூர்ணிமா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்..
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.. அப்போது பூர்ணிமாவை காப்பாற்ற முயன்ற மகாலிங்கத்திற்கும் தீக்காயம் ஏற்பட்டது.. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூர்ணிமா உடனடியாக மீட்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.. ஆனால் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா நேற்று முன்தினம் உயிரிழந்தார்.. இந்த சம்பவம் செவ்வாத்தூர்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
உறவினர்கள் போராட்டம்
பூர்ணிமாவின் மரணத்திற்கு காரணமான மகாலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூர்ணிமாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. மேலும் உயிரிழந்த ஆசிரியையின் 2 குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்வாதார செலவுகளை மகாலிங்கம் குடும்பத்தினர் ஏற்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.. அப்போது அங்கு வந்த மகாலிங்கத்தின் சகோதரியும், ஓய்வுபெற்ற எஸ்ஐ-யுமான சாந்தி என்பவர் பூர்ணிமாவின் உறவினர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்..
ஒருமையில் பேசிய சாந்தி
தாய் இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி பேசும்போது, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சாந்தி ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது.. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார், தகராறில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பெண் எஸ்ஐ சாந்தியை கைது செய்தனர்.. கணவரின் குடி பழக்கம் மற்றும் பணத்தேவையால் ஒரு பள்ளி ஆசிரியை தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..












Click it and Unblock the Notifications