வாணியம்பாடியில் ஷாக்! சுத்தம் செய்யப்படாத கருவி.. 8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பல் மருத்துவர்!
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் கடந்த 2023ல் தொடர்ந்து 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல் மருத்துவ கருவிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமலும், ஒரே கருவியை பலருக்கும் பயன்படுத்தியதும்தான் காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.
வாணியம்பாடியில் அறிவு பல் மருத்துவமனை செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு ஸ்ரீராம் என்கிற இளைஞரின் தாய் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஓரிரு வாரத்தில் உயிரிழந்துவிட்டார். என்ன நோய்? ஏன் உயிரிழந்தார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனால் அதன் பின்னர்தான் தெரிந்தது, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் இதேபோல அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்று.

இதனையடுத்து அவர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நிர்வாகம், புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவை விசாரணைக்கு நியமித்திருந்தது. இக்குழு விசாரணை நடத்தி தற்போது அதன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் முறையாக தூய்மைப்படுத்தப்படவில்லை என்றும், ஒரே கருவியை மீண்டும் மீண்டும் பலருக்கு பயன்படுத்தியதாலும் இந்த மரணம் நடந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பான விவரங்கள் ஆங்கில செய்தி ஊடகத்தில் இன்று வெளியாகியுள்ளன. அதாவது மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட சலீன் பாட்டிலை திறப்பதற்கு பெரியோஸ்டியல் லிஃப்ட் எனும் கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது பல் அறுவை சிகிச்சையின் போது திசுக்களைத் தூக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும். இந்த கருவியால் பாட்டிலை திறந்துவிட்டு அதை சுத்தப்படுத்தாமல் நோயாளிகளிடம் கருவியை மருத்துவர் பயன்படுத்தியிருக்கிறார்.
இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இக்கருவியை சுத்தப்படுத்தாமல் அடுத்தடுத்த நோயாளியிடம் பயன்படுத்தியதால் 11 பேருக்கு ஆபத்தான தொற்று பரவியிருக்கிறது. மருத்துவர்கள் இந்த பாக்டீரியாவை 'பர்கோல்டேரியா சூடோமல்லே' என்று குறிப்பிடுகின்றனர். இது மூளையை நேரடியாக தாக்கும் பாக்டீரியாவாகும். இது ரத்தத்தில் நேரடியாக கலந்ததால் சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் தொடர்ச்சியாக உயிரிழந்திருக்கின்றனர் என்று மருத்துவ குழு தெரிவித்திருக்கிறது.
அறுவை சிகிச்சை கருவிகளை முறையாக சுத்தப்படுத்ததாததாலும், ஒரே கருவியை மீண்டும் மீண்டும் உபயோகித்ததாலும் இந்த தொற்று ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications