வேலூருக்குள் வந்த 108 ஆம்புலன்ஸ்.. டிரைவர்களுக்கு பாதுகாப்பு தேவை: மதுரை கோர்ட்டுக்கு ஓடிய இருளாண்டி
வேலூர்: வேலூரில் ஆம்புலன்ஸ் ஊழியர்களை எடப்பாடி பழனிசாமி சீண்டியதாக ஏற்கனவே கொதிப்பு உள்ளது.. இந்நிலையில், திருச்சி துறையூர் விவகாரமும் வெடித்து கிளம்பியிருக்கிறது. திருச்சி அதிமுக கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
வேலூரில் கடந்த 18ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியபோது 108 ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென வந்தது..

போலீசில் புகார்
ஆனால், அதனை திட்டமிட்டு திமுக இதுபோன்ற அதிமுக கூட்டங்களில் போது நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்... அத்துடன், 108 ஆம்புலன்ஸ் டிரைவரை அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது... இதையடுத்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் தரப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி இச்செயலுக்கு பொது மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் , முதலமைச்சர் துணை முதலமைச்சர் என யாருடைய கூட்டமாக இருந்தாலும் ஆம்புலன்ஸ் வரத்தான் செய்யும். எனவே இனி 108 ஆம்புலன்ஸ்க்கு இடையூறு இல்லாமல் கூட்டங்களை எந்த கட்சியாக இருந்தாலும் நடத்த வேண்டும்:" என்றும் கோரப்பட்டிருந்தது.
துறையூரில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி துறையூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது துறையூர் அருகே ஆத்தூர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக துறையூரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ், அதிமுக தொண்டர்கள் நின்று கொண்டிருந்த வழியாக சென்றுள்ளது.
அப்போது திடீரென ஆம்புலன்ஸை வழிமறித்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் கதவை திறந்து டிரைவரை தாக்க முற்பட்டனர். ஆம்புலன்ஸ் பின்பக்க கதவை திறந்து கண்ணாடிகளை உடைத்துள்ளனர். டிரைவர் செந்தில், உதவியாளர் ஹேமலதா (கர்ப்பிணி) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக டிரைவர் செந்தில் துறையூர் போலீசில் புகார் தந்தார். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இருளாண்டி ஐகோர்ட் கிளையில் மனு
இதனிடையே, மதுரையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்..
அதில், "கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸில் பைலட்டாக பணியாற்றி வருகிறேன். எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தில் சென்ற ஆம்புலன்ஸ் பைலட் சுரேந்தரை பார்த்து, ''நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் பைலட் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார்'' என்று மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
விரைவில் விசாரணை
கடந்த 24ம் தேதி திருச்சியில் எடப்பாடி பிரச்சார கூட்டத்திலும் ஆம்புலன்ஸை சேதப்படுத்தி, பைலட்டை தாக்கியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உயிருக்கும், உடலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரையிலாவது தமிழ்நாடு முழுவதும் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதிபடுத்துமாறு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications