நகைக்கடன், வாகன கடன் வாங்கிய வேலூர் பெண்.. வங்கி செய்த தவறால் அடித்த அதிர்ஷ்டம்.. என்ன நடந்தது?
வேலூர்: வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தொழில் முனைவோர் தாட்சாயினி என்பவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் மற்றும் வாகன கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் தொகையை செலுத்திய பின்னர், தடையில்லா சான்றை வங்கி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இந்த சேவை குறைபாட்டிற்காக வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வேலூர் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு வழங்கிய தீர்ப்பை பற்றி பார்ப்போம்.
வங்கிகளில் சேவை குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். கடன் தொடர்பான சேவைகளில் தவறுகள் நடந்தால், கிரெடிட் கார்டு தொடர்பான சேவைகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் , சேமிப்பு விவகாரத்தில் தவறுகள் நடந்தால், தவறுகளை சரி செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டால், வேண்டுமென்றே வங்கி நிர்வாக அதிகாரிகள் தவறுகளை செய்து அலைகழிக்க வைத்தால் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடும், நிவாரணமும் பெற முடியும். அப்படித்தான் வேலூரைச் சேர்ந்த பெண்ணுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தாட்சாயிணி என்ற தொழில் முனைவோர், கடந்த 2018-ம் ஆண்டு அல்லாபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் மற்றும் வாகன கடன் வாங்கியிருக்கிறார். அதற்கான வட்டி மற்றும் அசல்தொகை முழுவதையும் தாட்சாயிணி கடந்தாண்டு செலுத்தியுள்ளார். கடன்தொகையை செலுத்திய பின்னர் , முறையாக வழங்க வேண்டிய தடையில்லா சான்றை ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் வங்கி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதுபற்றி தாட்சாயிணி பலமுறை கேட்டும் வங்கி நிர்வாகம் பதில் அளிக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த தாட்சாயிணி நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்தார்.
தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக தாட்சாயிணி வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் வங்கியின் சேவை குறைபாட்டிற்காக ரூ.11½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆவணங்களை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மீனாட்சி சுந்தரம் தீர்ப்பு வழங்கினார். அதில் சேவை குறைபாடு காரணமாக வேலூர் தொழில்முனைவோர் தாட்சாயிணிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதுக்காக ரூ.25 ஆயிரம் அபராதம் ஆகியவற்றை வங்கி ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முன்னதாக சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் கிரெடிட் கார்டு சேவையில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றார். சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதற்காக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "நான், கடந்த 2000-ம் ஆண்டு முதல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகிறேன். கிரெடிட் கார்டு மூலம் மேற்கொண்ட செலவு மற்றும் பணம் செலுத்திய விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினேன்.
இந்த தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் தெரிவித்தது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி கணக்கு விவரங்களை கோரினால் வழங்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கிறது. கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை வங்கி நிர்வாகம் வழங்காததால் அந்நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் தேவராஜன் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் வி.ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர் தேவராஜன் வங்கியிடம் விவரங்களை கோர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்தாலும், சேவை வழங்குனர் என்ற அடிப்படையில் இந்த தகவல்களை வழங்குவது வங்கியின் கடமையாகும். எனவே, சேவை குறைபாட்டு மற்றும் மன உளைச்சலுக்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். மனுதாரர் கோரும் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்கு வழங்க வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications