Vellore Exit poll 2024: திடீர் ட்விஸ்ட்டாக ஏ.சி.சண்முகம் வெல்கிறாரா? கதிர் ஆனந்துடன் நெக் டூ நெக்!
வேலூர்: வேலூரில் லோக்சபா தொகுதியில் புது ட்விஸ்ட்டாக பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்மும் வெற்றி பெறவும் வாய்ப்பிருப்பதாக தந்தி டிவி கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
நாடு முழுவதும் 18ஆம் லோக்சபாவுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்துள்ள நிலையில் அதற்கான தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.

2024 லோக்சபா தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் தலையெழுத்தை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க போகிறார்கள். பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்ப்புடன் பாஜக கூட்டணி உள்ளது.
அது போல் 10 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மாநில தேர்தல்களில் ஆட்சியை இழந்து தேய்ந்து வரும் காங்கிரஸ் கட்சியோ இந்த முறை பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று முனைப்புடன் போட்டியிட்டுள்ளது.
543 தொகுதிகளில் 272 இடங்களில் யார் பெரும்பான்மை பெறுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும். இந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த 39 தொகுதிகளுக்கான தேர்தலில் முதல் கட்டாக நடந்து முடிந்தது.
இதில் தமிழகத்தில் பல்வேறு விஐபி தொகுதிகள் உள்ள நிலையில் வேலூரும் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு திமுக சார்பில் கதிர் ஆனந்தும் பாஜகவின் சார்பில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குளையும் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளையும் பெற்றனர். இதில் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 8000 ஆகும். கடந்த முறை விட்டதை இந்த முறை பிடிப்பதற்காக ஏ.சி.சண்முகம் முழு முனைப்பில் போட்டியிட்டுள்ளார்.
அவருக்காக குஷ்பு, அவரது கணவர் சுந்தர் சி, அண்ணாமலை உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். வேலூர் லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள்: வேலூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர். இஸ்லாமியர்கள் அதிக வாக்காளர்களாக இருக்கும் தொகுதி. வேலூர் தொகுதியில் 5 முறை திமுக, காங்கிரஸ் 3 முறை, அதிமுக, பாமக இரு முறை வென்றுள்ளன. திமுக அணியில் முஸ்லிம் லீக் ஒரு முறை வென்றுள்ளது. 6 முறை முஸ்லிம் வேட்பாளர்கள் வென்ற தொகுதி இது. 2021-ல் 4 தொகுதிகளில் திமுக, 2-ல் அதிமுக வென்றிருந்தன.
இந்த நிலையில் தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு 35 சதவீத வாக்குகளும் பாஜகவின் ஏ.சி.சண்முகத்திற்கு 33 சதவீத வாக்குகளும் அதிமுகவின் பசுபதிக்கு 22 சதீவத வாக்குகளும் கிடைக்கும். இதில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் வெற்றியில் இழுபறி உள்ளது.
இந்த தேர்தலில் 8 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் வாக்குகளே இருவருக்கும் வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த முறை திடீர் ட்விஸ்ட்டாக ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் வெல்ல வாய்ப்புள்ளது. ஆம்பூர். வாணியம்பாடியில் திமுகவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அது போல் ஊரக பகுதிகளில் ஏ.சி.சண்முகத்திற்கு செல்வாக்கு உள்ளது.
ஊரக பகுதிகளில் ஏராளமான மருத்துவ முகாம்களை ஏ.சி.சண்முகம் நடத்தியுள்ளார். பாஜகவின் தாமரை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டாலும் அந்த தொகுதி மக்களுக்கு தாமரை மீதான வெறுப்பை விட ஏ.சி.சண்முகத்தின் மீதான நம்பிக்கை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் கதிர் ஆனந்தோ அல்லது ஏ.சி.சண்முகமோ வெல்ல வாய்ப்பிருக்கிறது.











Click it and Unblock the Notifications