வேலூரில் அதிசயம்! சென்னை மக்களுக்கு வாய்ப்பு.. இன்னைக்கு நைட் மிஸ் பண்ணாதீங்க
வேலூர்: இன்று இரவு வானில் விண்கல் மழை பொழிய உள்ளது. இதனை பார்ப்பதற்கு சரியான இடம் வேலூர்தான். எனவே சென்னை மக்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் கண்டு ரசியுங்கள்.
விண்கல் மழை: விண்வெளியில் வால் நட்சத்திரம் என்கிற அற்புதமான ஒன்று இருக்கிறது. இது சூரியனை சுற்றி வருகிறது. இந்த பயணித்தின்போது போகும் வழியெல்லாம் தன்னுடைய வாலில் இருந்து சிறிய விண்கற்களையும், தூசி துகள்களையும் விட்டு செல்கிறது. இப்படி விட்டு செல்லப்பட்ட விண்கற்களின் பக்கத்தில் பூமி வரும்போது, அந்த கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இந்த கற்கள் ரொம்ப சிறியது. எனவே வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுடன் உரசி தீப்பற்றி எரிந்துவிடுகிறது.

பூமியிலிருந்து இந்த நிகழ்வை பார்ப்பதற்கு விண்கல் மழை போல இருக்கும். அற்புதமான இந்த நிகழ்வு இன்று இரவும், நாளை இரவும் நடக்கிறது. இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
வரப்பிரசாதம் வேலூர்: குவாட்ரான்டிட் விண்கல் மழை என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு டிசம்பர் 17ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை நடக்கிறது. ஆனால் இன்றும் நாளையும் மட்டும்தான் அதிகமான விண்கற்கள் பூமி மீது விழும். எனவே, இந்த விண்கல் மழையை கண்டு ரசிக்க ஏற்ற நாள் இதுதான். அதேபோல சென்னையிலிருந்து இதனை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் இங்கு ஒளி மாசு அதிகம். எனவே விண்கல் பொழிவு சரியாக தெரியாது. இதற்கு ஏற்ற இடம் வேலூர்தான்.
அதாவது வேலூர் மாவட்டத்தில் உள்ள வைணு பாப்பு விண் ஆய்வகம் பகுதியில் ஒளி மாசு குறைவு. இந்த ஆய்வகம் திருப்பத்தூரில் அமைந்திருக்கிறது. நீங்கள் ஆய்வகத்திற்கு சென்று, அங்குள்ள தொலை நோக்கி மூலம் இதை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆய்வகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சென்று சும்மா வெறும் கண்களால் வானத்தை பார்த்தாலே போதும். விண்கல் மழை தெளிவாக தெரியும்.
ஒரு மணி நேரத்திற்கு 120 விண்கற்கள்: 6-12 மணி நேரம் வரை இந்த விண்கல் மழை பொழியும். உச்சமாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 120 விண்கற்கள் பூமி மீது பொழியும். பல்வேறு நிறங்களில் கறுப்பு வானத்தில் கோடு போட்டால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இந்த விண்கல் மழை தெரியும். நள்ளிரவுக்கு பின்னரும், விடியலுக்கு முன்னரும் இதனை தெளிவாக பார்க்க முடியும். அதாவது இரவு 12 மணிக்கு பிறகு அதிகாலை 3 மணிக்கு முன்பு இதனை நன்றாக பார்க்க முடியும்.
எப்படி பார்ப்பது?: மேலே குறிப்பிட்டதை போல, இந்த விண்கல் மழையை வெறும் கண்களால் பார்க்கலாம். தொலை நோக்கியோ, இதர கருவிகளையோ கொண்டு பார்க்கும்போது இதன் அழகை ரசிக்க முடியாது.
விண்வெளி துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு துறை சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே சிறுவர்கள், மாணவர்களிடம் விண்வெளி குறித்த ஆர்வத்தை மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு.












Click it and Unblock the Notifications