தான செட்டில்மென்ட் பத்திரம்.. பட்டா மாறுதல் கேட்ட ஆட்டோ டிரைவர் செய்த காரியம்.. விழித்த வேலூர் விஏஓ
வேலூர்: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில், அதற்கேற்றார்போல் கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. அந்தவகையில், வேலூர் மாவட்டத்திலும் அரசு அதிகாரி ஒருவர் கைதாகி உள்ளார்.. அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருவது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்த வண்ணம் உள்ளது.
குடியாத்தத்தில் தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

சாதி சான்றிதழ் கோரியும், பட்டா கோரியும், நிலத்தை அளக்க கோரியும், உதவித்தொகை கோரியும், பலரும் விண்ணப்பிக்கிறார்கள்.. இந்த சான்றிதழ்களை பெறுவதற்கு ஆன்லைனில் பல வசதிகளை அரசு செய்து தந்திருந்தாலும், சிலசமயம் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன.. இதனால், அரசு அலுவலகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகவே செல்ல நேரிடுகிறது..
வேலூர் கிராம நிர்வாக அலுவலர்
தங்களது மனுக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்கும்போது, அவர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார்களும், இது தொடர்பான கைது நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. இதோ வேலூர் மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது வேப்பூர் ஆர்.எஸ் கிராமம்.. இங்கு வசித்து வருபவர் 40 வயது நிஜாமுதீன்.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இவரது அம்மா பெயர் பரிதா பேகம்.
பரிதா பேகத்தின் பெயரில், வீட்டுக்கு அருகிலேயே 639 சதுரடி காலிமனை உள்ளது. இந்த இடத்தை மகன் நிஜாமுதீன் பெயருக்கு கடந்த நவம்பர் மாதம் தான செட்டில்மென்ட் எழுதி தந்துள்ளார்.. பள்ளிகொண்டா பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு முடிந்த நிலையில் பரிதா பேகத்தின் பெயரில் உள்ள பட்டாவை பெயர் மாற்றம் செய்யுமாறு ஆன்லைனில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து வேப்பூர் ஆர்.எஸ் விஏஓ கோபி என்பவரிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆன்லைனில் வந்த பட்டா
இதனிடையே, பட்டா பெயர் மாற்றத்தை ஏற்காத விஏஓ கோபி, பரிதா பேகத்தின் பெயரிலேயே பட்டாவை ஆன்லைனில் மறுபடியும் அனுப்பி வைத்திருக்கிறார்..
இதையடுத்து விஏஓ அலுவலகத்துக்கு சென்ற நிஜாமுதீன், "ஏன் பட்டாவில் பெயர் மாறவில்லை" என கோபியிடம் கேட்டுள்ளார். அதற்கு விஏஓ, "என்னை கேட்காமல் எப்படி நீங்கள் தான செட்டில்மென்ட் கொடுக்கலாம்" என்று கேட்டுள்ளார்.. இதையடுத்து, ஆன்லைனில் பட்டா மாற்றம் கோரி 2 முறை நிஜாமுதீன் மனு செய்துள்ளார்.
அப்போதும் பரிதா பேகத்தின் பெயரிலேயே பட்டா வந்துள்ளது. வேறு வழியில்லாமல் மறுபடியும் விஏஓ கோபியிடம் இதுகுறித்து நிஜாமுதீன் கேட்டிருக்கிறார்.. அப்போதுதான், ரூ.15 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் பட்டா மாற்றம் செய்யப்படும் என்றாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த நிஜாமுதீன், அவ்வளவு பணம் கொடுக்க முடியாத நிலைமையில் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
பேரம் பேசிய விஏஓ
அப்போதும் விஏஓ விடாமல், "ரூ.10 ஆயிரம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருகிறேன்" என்றாராம்.. அந்த பணத்தையும் கொடுக்க விரும்பாத நிஜாமுதீன், வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தந்தார்..
அதன்பேரில், அவரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. அந்த பணத்தை விஏஓ கோபி பெற்றுக் கொண்டார். அப்போது அதிகாரிகள் கோபியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications