ஓய்வு பெற போகும் வேலூர் விஏஓ ஷர்மிளாவுக்கு தேடி வந்த அடுத்த வில்லங்கம்.. போலீசார் அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா என்பவர், அங்குள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரிய மனுவுக்கு லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் போலீசில் சிக்சிய ஷர்மிளா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் உள்ள எந்த அரசு அலுவலங்களிலும் லஞ்சம் கொடுத்து அரசின் சேவைகளை பெற வேண்டும். குறிப்பாக
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, நிலத்தை அளப்பதற்கு, அரசின் பல்வேறு சான்றிதழ் பெறுவதற்கு விஏஓ, சர்வேயர், துணை தாசில்தார் அரசு அதிகாரிகளுக்கு மக்கள் லஞ்சம் தர வேண்டிய அவசியமே இல்லை.. அப்படி யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம். வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்

வேலூர் அலமேலுமங்காபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பட்டாபிராமன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் தமிழரசன் என்பவரிடம் வீட்டு மனை வாங்கியிருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் நிலத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.. பத்திரப்பதிவு மட்டும் செய்து விட்டு, அதில் வீடு கட்டி வசித்துள்ளார். தொடர்ந்து அவர் அதை தனது மனைவி சரஸ்வதி (வயது 55) பெயருக்கு எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். ஆனால் 20 ஆண்டுகளாக அந்த இடத்தின் பட்டா தமிழரசன் பெயரிலேயே இருந்துள்ளது.
இந்தநிலையில் சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று வேலூரில் விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பான விண்ணப்பம் வேலூர் அருகே உள்ள அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலரான சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஷர்மிளா (59) என்பவருக்கு வந்துள்ளது. அவரும் விசாரணை மேற்கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட்டா பெயர் மாற்றத்துக்கு விஏஓ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுகுறித்து வேலூர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரஸ்வதியிடம் வழங்கி, ஷர்மிளாவிடம் கொடுக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதனிடையே சரஸ்வதி நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் அலமேலுமங்காபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று தான் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை ஷர்மிளாவிடம் வழங்கியுள்ர். அதை அவர் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். தொடர்ந்து அவரிடம் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விஏஓ ஷர்மிளா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் அவரை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் போலீசார் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட ஷர்மிளாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் மீது துறைசார்ந்த அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளனர். விரைவில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications