வேலூர் வெள்ளையப்பன் ஞாபகமிருக்கா? ஆடிட்டரையும் விட்டு வைக்காத அபுபக்கர் சித்திக்.. 2 கேஸில் கைது
வேலூர்: தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக். போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், 30 வருடங்களாகவே தலைமறைவாக இருந்த அபுபக்கரை 2 மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தீவிரவாதி அபுபக்கர் சித்திக்குக்கு, மேலும் இரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இதையடுதது, கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் 2 மாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கினார்கள்..

அபுபக்கர் சித்திக் சிக்கினார்
இவர்களுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலையில் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்கள்.
கடந்த 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்தவர்கள்தான் நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி.
மொத்தம் 7 கேஸ்
அதேபோல, 2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு, 1995ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு, 2011 மதுரை திருமங்கலம் அத்வானி ரதயாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றியவர் அபுபக்கர் சித்திக்..
கடந்த 30 வருடங்களாகவே தலைமறைவாக இருந்த நிலையில், போலீஸார் கைது செய்யப்பட்டிருந்தார்.. இப்படி தமிழகத்தில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக்கை, 30 வடங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலம், அன்னமயம் மாவட்டம், கடப்பா அருகே உள்ள ராயச்சோட்டில் தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்திருந்தனர்.
6 நாட்கள் விசாரணை
அப்போது அவரிடமிருந்து லேப்டாப் உட்பட ஏராளமான மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, வெடிப்பொருட்களை பறிமுதல் செய்தது, அவரை புழல் சிறையிலும் அடைத்தனர்.
இந்நிலையில், அபுபக்கர் மீதான 7 வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த முடிவானது.. குறிப்பாக, 2012ல் பாஜக மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்த அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அபுபக்கர் சித்திக் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், அதுகுறித்து 6 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஆந்திராவில் அவர் வசித்த வீட்டுக்கும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சில முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
வேலூர் வெள்ளையன்
அதுமட்டுமல்ல, மேலும் சில வழக்குகளிலும் சித்திக்குக்கு தொடர்பிருப்பது தொியவந்தது. இந்நிலையில், வேலூரில் கடந்த 2013ல் இந்து முன்னணி மாநில செயலாளராக இருந்த வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கு, அதே வருடத்தில், பாஜக மாநில செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு என இரண்டு கொலை வழக்குகளிலும், அபுபக்கர் சித்திக்கை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கண்ட 2 வழக்குகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 11 வழக்குகள் அபுபக்கர் சித்திக்கின் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications