போலந்து நாட்டில் ஜூஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர் படுகொலை
வேலூர்: போலந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் தமிழக இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சமீப காலமாக வெளிநாட்டிற்கு வேலைத் தேடி செல்லும் இளைஞர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது. அதற்கு வெளியுறவு துறை அமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், போலந்து நாட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட தமிழக இளைஞரின் உடலை மீட்டு தரக் கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஜூஸ் நிறுவனத்தில் பணி
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் டிப்ளமோ படித்திருந்த நிலையில், சென்னையிலுள்ள ஒரு ஏஜென்சி மூலம் போலந்து நாட்டிற்கு சென்றார். அங்கு, வெர்சா என்ற பகுதியில் ஜீஸ் நிறுவனம் ஒன்றில் பராமரிப்பு பணியில் சேர்ந்தார். கடந்த 45 நாட்களாக இவர் பணியாற்றி வந்துள்ளார்.

போலந்தில் பணி
ஏஜென்சி மூலம் ரூ.6 லட்சம் பணம் கொடுத்து வெங்கடேசன் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெங்கடேசன் வீட்டிற்கு பேசாததால் அவரின் உறவினர்கள் செல்போனுக்கு தொடர்புகொண்டனர். ஆனால் வெங்கடேசன் தொலைபேசியை எடுக்காததால், அவரை பணிக்கு அனுப்பிய ஏஜென்சியை தொடர்பு கொண்டனர்.

சண்டையில் பலி
இதனையடுத்து, அவர்கள் மறு நாள் (திங்கட் கிழமை) விசாரித்த போது, வெங்கடேசன் தங்கியிருந்த அறையில் நடந்த சண்டையை விலக்க சென்றதாகவும், அப்போது, அவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
இந்தநிலையில், வெங்கடேசனின் மனைவி கலைச்செல்வி கைக்குழந்தையுடன் ஊர் மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளியிடம் மனு அளித்தார். அதில், வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலை மீட்டுத் தருமாறும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு, உரிய நஷ்டஈட்டை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை பெற்றுகொண்ட அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications