சிலை கடத்தல் விவகாரத்தில் எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.. அமைச்சர்கள் குற்றச்சாட்டு
Recommended Video
வேலூர்: சிலை கடத்தல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி பேசிய தனியார் தொலைக்காட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளனர்.
சிலைக்கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருந்ததாக தகவல் வெளியானது. மேலும் டிஎஸ்பி காதர் பாட்ஷாவின் மனுவில் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொன்.மாணிக்கவேல் தரப்பு புகார் குறித்து ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர், இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளிக்க அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய சேவூர் ராமச்சந்திரன், மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கும் நற்பெயரை வேண்டுமென்றே களங்கப்படுத்த உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
எங்களுக்கு தொடர்பில்லாத விவகாரத்தில் எங்களை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டு, எங்களுக்கும் எங்களது குடும்பத்தினருக்கும் தேவையில்லாத மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ள தனியார் தொலைக்காட்சி மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும் பொன்.மாணிக்கவேல் எங்கள் மீது நேரடியாக குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் வேண்டுமென்றே தங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் விஷமத்தனமாக செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக இரு அமைச்சர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.