வேலூர் தொழில் அதிபர்களால் ட்விஸ்ட்.. ஜோலார்பேட்டையில் கேசி வீரமணிக்கு கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் கே.சி.வீரமணி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளதாக வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர்களான ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி மற்றும் 2 பேர் என 4 பேர் குற்றம்சாட்டினார்கள். இவர்களை கேசி வீரமணி ஆதரவாளர்கள் அடித்து உதைத்தனர். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் வலம் வரும் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதியில் நான்காவது முறையாகக் களமிறங்குகிறார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று அமைச்சராக இருந்த வீரமணி, 2021 தேர்தலின்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் தேவராஜிடம் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் களறங்கி உள்ளார்.

நேற்று ஜோலார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.சி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர்களான ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி மற்றும் 2 பேர் என 4 பேர் சென்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.சி.வீரமணியின் வேட்புமனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக பணம் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டினார்கள். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளதாகவும், தற்போதைய தேர்தலிலும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர்களான ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை கண்டு ஆத்திரமடைந்த வேட்பாளர் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் வேட்புமனு பரிசீலனை நடந்த இடத்திலேயே ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் முன்னிலையில் தாக்கி செல்போன்களை பறித்து உடைத்தார்கள். அவர்கள் தாக்கியதில் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் சட்டை கிழிந்து ஓடினார்கள்.
உடனடியாக ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 4 பேரையும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தாலுகா அலுவலகத்தில் இருந்து அழைத்து சென்றார்கள். அப்போது அ.தி.மு.க.வினர் மீண்டும் அவர்களை தாக்க முயன்றனர். இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், காயம் அடைந்த ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 4 பேரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதற்கிடையில் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் தரப்பினர் தங்களை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி கே.சி.வீரமணி தரப்பைச் சேர்ந்த 7 பேர் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இதை அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால் கூறுகையில், இங்கு நடைபெற்ற சம்பவம் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அளிக்கும் அறிக்கையின்பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி தாசில்தார் காஞ்சனா அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார், முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் கசிகரன் (39), திருமூர்த்தி (29), ஜெயபிரகாஷ் (28), மகாலிங்கம் (60), பிரபு (47) ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலூர் தொழிலதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.சி.வீரமணி உட்பட அ.தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications