எங்கள் எதிரி திமுக தான்.. இப்பவும் விட்டுத் தராம முட்டுக் கொடுக்கிறாரே ராஜு!
ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றிமுகத்தை தொடர்ந்து அதிமுகவின் ஓரே எதிரி திமுக தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கு பாதி வாக்கு வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளதால் ஆளுங்கட்சி அமைச்சர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை அதனை பற்றி கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறினார். மேலும் தினகரன் வென்று ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யாரும் அரசுக்கோ, அதிமுகவுக்கோ அப்படி நெருக்கடி தரமுடியாது என்று கூறினார்.
அதிமுக மிகப்பெரிய ஆலமரம் அதனை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூறிய அவர், தங்களின் ஒரே எதிரி திமுக தான் என்றார். இதுவரை தினகரன் மற்றும் சசிகலாவை எதிர்த்து வந்த ஆளுங்கட்சியினர் தினகரனின் வெற்றிமுகத்தை தொடர்ந்து தற்போது தங்கள் நிலையிலிருந்து மாறி ஜகா வாங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
திமுக - அதிமுக எதிரி கட்சிகள் என்று பலவருடமான பழைய மாவில் தோசை சுட்டு மக்களை ஏமாற்றி வந்த அதிமுகவினர் மீண்டும் தற்போது அதே மாவை இப்போது கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. தினகரனும் மதுரையில் இருக்கும் இந்த வேளையில் மதுரையில் உள்ள செல்லூர் ராஜூவின் இந்த நழுவில் பதில் தினகரனுக்கு விடும் சமாதான தூதாகவும் கருதப்படுகிறது.
இந்த சம்பவங்களை கூட்டி கழித்து பார்த்தால், தினகரன் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் தொடர்ந்து நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. "அதிமுகவில் எங்களின் ஸ்லீப்பர் செல்கள் நிறைய பேர் உள்ளனர்"