விகாரி தமிழ் வருடப்பிறப்பு : சகல சௌபாக்கியங்களை பெற்று தரும் குலதெய்வ வழிபாடு
மதுரை: தமிழ் புத்தாண்டு தினமான இன்று ஏராளமானோர் அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டனர். ஏராளமானோர் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாது உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களும் தமிழ் வருடப்பிறப்பை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான்.
சித்திரை வருடப்பிறப்பை வடநாட்டில் பைசாகி என்றும் ,மேஷ சங்கராந்தி என்றும் குறிப்பிடுவர். கேரளத்தில் விஷூ என்றும் கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்
விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020 : மேஷம், சிம்மம்,விருச்சிகம், கும்பத்திற்கு மிக சிறப்பு
குலதெய்வ வழிபாடு
சித்திரை புத்தாண்டு அன்று நமது குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும். நம் இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கினால் தான் சகல சௌபாக்க்யங்களும் நம்மை தேடி வரும். வாழ்க்கை செழிப்புடன் அமையும்.
பஞ்சாங்கத்திற்கு பூஜை
புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகியவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும்.
பஞ்சாங்கம் படித்தல்
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரைமுதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும். அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும்.
சித்திரை கைநீட்டம்
புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.
சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர்.
கனி காணுதல்
சித்திரை வருடப்பிறப்பான இன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நடைபெற்றது. பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி, மகிழலாம். மாலையில் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுதல் அதிக நன்மைகளைத் தரும்.