திமுகவும் பாஜகவும் ஒண்ணு கூடிட்டாங்க.. ஆளுநர் சுதியை மாத்திட்டாரு.. அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பரபர
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்தித்து கும்மிடு போட்டதில் இருந்து தமிழக ஆளுநர் தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசிக் கொண்டிருப்பதாகவும், திமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து கொண்டு செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்சயபா எம்.பி-யுமான சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுகவின் 53-வது ஆண்டு விழா தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.பி சி.வி.சண்முகம், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது பிரதமர் மோடியை பார்த்து கும்மிடு போட்டாரோ அன்றிலிருந்து தமிழக ஆளுநர் தனது சுதியை மாற்றிகொண்டுவிட்டார். குற்றம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த ஆளுநர், தமிழக அரசை வானளவு உயர்த்தி பேசி கொண்டிருக்கிறார்.
இன்று திமுகவும் பாஜகவும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்ற. திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் காட்சிகளை விரைவில் நாம் பார்ப்போம். திராவிட மாடல் அரசு என்று சொல்லிக்கொண்டு பண்டாரம் பரதேசி என்று சொன்னவர்களோடே இப்போது 'பண்டாரம் பரதேசியாக மாறி ஜால்ரா அடிக்கும்' அரசு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது". எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய சிவி சண்முகம், "அதிமுக சீறும் சிறப்புமாக உள்ளதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சூளுரைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.அனைத்து விதமான சாத்தியமான வழிகளையும் அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications