ராமதாஸை சந்திக்க வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி.. பாமகவில் முடிவுக்கு வரும் மோதல்?
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் வந்துள்ளனர். சில மணி நேரத்திற்கு முன்பாக பாமக தலைவர் அன்புமணி தைலாபுரம் வந்த நிலையில், ராமதாஸ் உடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்புமணி எடுத்த முடிவுகள் மீது சரமாரியாக ராமதாஸ் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் பாமக நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி, ராமதாஸ் கொள்கையை ஏந்தி பாமகவில் பயணிப்போம் என்று அறிவித்தார்.

அன்புமணி vs ராமதாஸ்
இதனால் அன்புமணி பாமகவை கையில் எடுக்க முடிவு செய்துவிட்டதாக பார்க்கப்பட்டது. ஆனாலும் நேற்று வரை அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் 31 மாவட்டச் செயலாளர்களை ராமதாஸ் பதவியில் நீக்குவதாக அறிவித்தார். அதேபோல் வன்னியர் சங்க நிர்வாகிகளின் ஆதரவும் ராமதாஸ்-க்கு இருக்கிறது. இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலை நிறைவு செய்ய சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தைலாபுரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி
இந்த நிலையில் சென்னையில் இருந்த அன்புமணி திடீரென இன்று காலை தைலாபுரத்தில் உள்ள ராமதாஸை சந்திக்க புறப்பட்டார். அன்புமணியின் திடீர் பேச்சுவார்த்தைக்கு என்ன காரணம் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வந்த சில மணி நேரங்களிலேயே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி வந்தனர்.
அமித் ஷா - குருமூர்த்தி
இவர்கள் இருவரும் இணைந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ்-க்காக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவரின் இல்லத்திலேயே ஆலோசனை மேற்கொண்டார்.
பாஜக - பாமக கூட்டணி?
இதனால் ஆடிட்டர் குருமூர்த்தி நேரடியால தைலாபுரத்திற்கே சென்று ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது பல்வேறு விவாதங்களை தொடங்கி இருக்கிறது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
வட மாவட்டங்களில் கவனம்
ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். அப்போது தென் மாவட்டங்களில் அடுத்தக் கட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இதனால் வட மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த ஆடிட்டர் குருமூர்த்தி முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக விவாதங்கள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications