வாயை மூடி பேசவும்..அண்ணாமலை பேச்சால் பாமகவுக்கு சிக்கல்! சிதறும் அதிமுக ஓட்டுகள்! திமுக ஏக குஷியாமே!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கி இருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாத நிலையில் அக்கட்சியினர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் கடைசி நேரத்தில் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினரை கொதிப்படையச் செய்திருப்பதால், பாமகவுக்கு அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறுகின்றனர் அதிமுகவினர்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.
இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கி நாளை மாலையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் அவர்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் தங்கள் கட்சி வேட்பாளரான சி.அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது, அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினரை கொந்தளிப்படைய செய்திருக்கும் நிலையில் அது பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. நேற்று முன் தினம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கும் தமிழக பாஜகவுக்கும் அருகதை இல்லை என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருந்தார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கரைந்து வரும் கட்சி. ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக மெதுவாக கரைந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி துரோகி.. பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர்" என மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக பாஜக இடையே குறைந்திருந்த வார்த்தைப் போர் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலையை விமர்சிப்பதும், பாஜகவினர் அதிமுகவினரை விமர்சிப்பதுமாக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு பாமகவுக்கு தான் பின்னடைவு என்கின்றனர் விழுப்புரம் அதிமுகவினர். தொடர்பாக பேசிய போது," பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்து இருக்கும் நிலையில் அதிமுகவினர் நிச்சயம் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதே நேரத்தில் சமுதாய அடிப்படையில் முன்னாள் கூட்டணி கட்சி என்று அடிப்படையில் பாமகவுக்கு வாக்களிக்கலாம் என சில நிர்வாகிகள் கருதி இருந்தனர். ஆனால் அண்ணாமலையின் பேச்சு அதை முற்றிலும் மாற்றி இருக்கிறது.
தொடர்ந்து அதிமுக முன்னாள் தலைவர்கள் குறித்தும் தற்போதைய தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால் பாமகவுக்கு வாக்களிக்கலாம் என நினைத்திருந்த அதிமுகவினர் கூட திமுகவுக்கே வாக்களிக்கலாம் என நினைக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அதிமுகவினரின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கும் அல்லது சுயேட்சைகளுக்கும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அண்ணாமலை தேர்தல் முடியும் வரை சற்று அமைதியாக இருந்திருந்தால் பாமக இரண்டாம் இடம் பிடிப்பதோடு, கௌரவமான வாக்குகளை பெற்றிருக்க முடியும், ஆனால் அண்ணாமலையின் பேச்சு அதை முற்றிலுமாக காலி செய்துள்ளது" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications