உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கு.. பண்ருட்டி வேல்முருகனுக்கு பிடியாணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் உள்பட 9 பேருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 ஏப்ரல் 1-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வரிகொடா இயக்கப் போராட்டம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 42 சுங்கச் சாவடிகளில் சுங்க வரி செலுத்த மறுத்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போலீசார் குவிப்பு
விழுப்புரம் மாவட்டம் (அன்றைக்கு விழுப்புரம் இப்போது கள்ளக்குறிச்சி) , உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை காவல்துறை டி.எஸ்.பி. ராஜேந்திரன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் உள்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உளுந்தூர் பேட்டை
காலை 11.05 மணிக்கு உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், இளைஞரணி அமைப்பாளர் கோபி உள்பட 500க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேல்முருகன் தலைமையில் வந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடி அறை, சேர், டேபிள், கண்காணிப்பு கேமரா ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

500 பேர் கைது
இதையடுத்து உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வேல்முருகன் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தனர். இந்நிலையில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 14 பேர்கள் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

9 பேருக்கு பிடியாணை
அவர்கள் மீதான வழக்கு உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியில் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான பண்ருட்டி வேல்முருகன் உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. 5 பேர் மட்டுமே ஆஜராகினர். இதையடுத்து வேல்முருகன் உள்பட 9 பேருக்கு பிடியாணை பிறப்பித்து வழக்கை வரும் செப்டம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி சண்முகநாதன் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications