''எவ்வளவு நாள் தான் செந்தில்பாலாஜியை காப்பாத்துவீங்க? நாங்களும் பார்க்கிறோம்'' -சி.வி.சண்முகம்
விழுப்புரம்: அமலாக்கத்துறை கைது நடவடிக்கையிலிருந்து இன்னும் எவ்வளவு நாள் தான் செந்தில்பாலாஜியை காப்பாற்றுவீர்கள் என்றும் அதனையும் நாங்கள் பார்க்கிறோம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விடுத்துள்ளார்.
செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கையை, எதை வைத்து பழிவாங்கும் நடவடிக்கை என ஸ்டாலின் கூறுகிறார் என்றும் உங்கள் ஆட்சியிலா அவர் தவறு செய்தார் எனவும் சி.வி. சண்முகம் வினவியுள்ளார். செந்தில்பாலாஜி தவறு செய்தது எங்கள் ஆட்சியில் என்றும் அதனால் தான் ஜெயலலிதா அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் எனவும் சி.வி.சண்முகம் பேசியிருக்கிறார்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை தருகிறேன் எனக் கூறி ஒரு வேலைக்கு 10 பேரிடம் காசு வாங்கியவர் செந்தில்பாலாஜி என சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், செந்தில்பாலாஜி பக்கம் நியாயம் இருந்தால் ஏன் விசாரணைக்கு செல்ல மறுக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு அழைத்தால் போய் நியாயத்தை சொல்ல வேண்டியது தானே எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இல்லாத நோய்க்காக இருதயத்தை அறுத்தால் என்னாகும் என்பதை தாம் சொல்லவிரும்பவில்லை என்றும் ஜெயிலுக்கு போனால் கூட ஓராண்டோ, இரண்டு ஆண்டோ வந்துவிடலாம் எனவும் செந்தில்பாலாஜிக்கு தாம் அறிவுரை கூற விரும்புவதாக தெரிவித்தார்.
என்ன இருந்தாலும் செந்தில்பாலாஜி ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தவர் என்றும் அந்த நல்லெண்ண அடிப்படையில் இதனைக் கூறியதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications