இங்க பாருங்க.. சிறையில் இருந்தே நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்!
விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சி திமுக வேட்பாளர் சிறையில் இருந்தபடியே தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள், வெற்றி தோல்வியை நிர்ணயித்த ஓட்டுகள் குறித்த சுவாரசிய விஷயங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றுள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

தேர்தல் பணி
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் எனும் 3 நகராட்சிகள் உள்ளன. அறங்கண்டநல்லூர், அனந்தபுரம், செஞ்சி, திருவெண்ணைநல்லூர், மரக்காணம், வளவனூர், விக்ரவாண்டி என 7 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 10 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக தனது கூட்டணி கட்சியுடனும், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தனித்தனியேவும் தேர்தல் பணியை மேற்கொண்டன.

14வது வார்டு
இதில் திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ள. இதில் திமுக சார்பில் 13வது வார்டில் பாபு (வயது 39) என்பவர் போட்டியிட விருப்ப மனு செய்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வேட்புமனு செய்து வார்டில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பிப்ரவரி 19ல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது.

தேர்தல் தகராறு
அப்போது திடீரென்று திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சுதா என்பவர் காயமடைந்தார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வேட்பாளர் கைது
இந்த தகராறு தொடர்பாக இருதரப்பினரும் ரோஷனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திமுக வேட்பாளர் பாபு உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு திமுக கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சிறையில் இருந்து வெற்றி
இந்நிலையில் தான் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திண்டிவனம் நகராட்சியில் 13வது வார்டில் பாபு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுதாவை தோல்வியடைய செய்தார். இருப்பினும் தேர்தல் தகராறில் சிறையில் உள்ளதால் பாபுவால் வெற்றியை கொண்டாட முடியவில்லை.












Click it and Unblock the Notifications