விழுப்புரம் அருகே சோகம்.. வெள்ள நீர் புகுந்து வீட்டின் சுவர் இடிந்ததில் மூதாட்டி பலி!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்த நிலையில், சுவர் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், விழுப்புரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் காலை ஆரம்பித்த மழை நேற்று வரை விடாமல் தொடர்ந்து பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை அடுத்து, விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருச்சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதோடு, வாகனங்களும் மூழ்கியதால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
கனமழை காரணமாக திருவாமாத்தூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அயினம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் இடுப்பளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் அயினம்பாளையம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், குப்பம்மாள் என்ற 70 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். வெள்ளத்தால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டியில் உள்ள வராக நதி ஆற்றின் மேல் ரயில்வே தண்டவாளத்தின் மீது வெள்ள நீர் செல்கிறது. விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications