என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது.. வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கனும்: சி.வி.சண்முகம்
விழுப்புரம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்..
சென்னை வேளச்சேரி புதிய தலைமைச் செயலக காலணியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், வனத்துறை அதிகாரியான இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு அதிமுக ஆட்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் வெங்கடாசலம் ஈடுபட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக வெங்கடாசலத்திற்கு சொந்தமான வீடுகளில் நடைபெற்ற சோதனையில் 10 லட்சம் ரூபாய் பணம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு வெங்கடாச்சலம் வேளச்சேரியில் உள்ள வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

வெங்கடாசலம் தற்கொலை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற வெங்கடாசலத்திடம் சோதனை குறித்து உறவினர்கள் கேட்டதால் மன உளைச்சல் அதிகரித்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. மேலும் அவரது அறையில் கடிதம் ஏதும் உள்ளதா? செல்போனில் தற்கொலைக்கான காரணம் ஏதும் இருக்குமா என விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

திமுக மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடா சலத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.. விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாத காலத்தில் தமிழகம் ஒரு மர்மதேசம் ஆக விளங்கிக் கொண்டிருப்பதாகவும், உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை அச்சத்தோடு பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மரணத்தில் மர்மம்
தமிழகத்தில் நிர்வாகத்தை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது குறித்து முதலமைச்சருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை எனவும், தமிழகத்தில் ஏதோ ஒரு நாடகம் நடைபெற்று வருகிறது. திமுகவினர் மக்கள் மத்தியில் நடித்துக் கொண்டிருக்கின்றனர் அமைச்சர் செயல்படுகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை என விமர்சித்த அவர், எதிர்க்கட்சியினரை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலத்தை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக வற்புறுத்தியதாகவும் , மறுத்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை
வெங்கடாசலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு வழக்குக்காக பயந்து அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், வெங்கடாசலம் அவர்கள் மரணம் மர்ம மரணம் எனவே தமிழக அரசு காவல்துறையின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே சிபிஐ விசாரணை மூலமாக விசாரணை செய்து உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் சிவி சண்முகம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications