பேரப் பிள்ளைகள், பாட்டி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலி- உயிரை குடித்த கல் குவாரி!
விழுப்புரம் : திண்டிவனம் அருகே கல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி புஷ்பா (60). இவர் தனது மகளின் குழந்தைகளான வினோதினி (16), ஷாலினி (14), கிருஷ்ணன் ( 8) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் துணி துவைத்துவிட்டு குளித்துவிட்டு வருவதற்காகச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நீச்சல் தெரியாமல் பேரக் குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற மூதாட்டி முற்பட்டபோது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குவாரி தண்ணீரில் மூழ்கிய புஷ்பா மற்றும் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டி, பேரன், பேத்திகள் என நான்கு பேர் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications