விக்கிரவாண்டி.. உதயநிதிக்கு சீட் கொடுங்க.. அறிவாலயத்தில் மனு கொடுத்த பொன்முடி மகன்
சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்தார்.
நாங்குநேரி சட்டசபை தொகுதியின் உறுப்பினராக இருந்த எச் வசந்தகுமார் தற்போது கன்னியாகுமரி லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டதால் அவர் அத்தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த ராதாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் அமமுக, மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தெரியவில்லை. இதனால் தற்போதைய நிலையில் அதிமுக- திமுகவுக்கு மட்டுமே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பம் தெரிவித்து பலர் மனு அளித்தனர். அதில் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட முன்னாள் மனோஜ்பாண்டியன், நாஞ்சில் பி.சி. அன்பழகன், கே ஆர் பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அது போல் விக்கிரவாண்டி தொகுதியில் முன்னாள் எம்பி ஆர் லட்சுமணன், ஆர் வேலு, முத்தமிழ்ச் செல்வன் , கே பன்னீர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பம் மனு பெறப்படுகிறது.
இதில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என கோரி பொன்முடியின் மகனும் லோக்சபா எம்பியுமான கவுதம சிகாமணி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது சொந்த செலவில் மனு தாக்கலுக்காக பணம் செலுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications