நான்தான் பாமக தலைவர்! அன்புமணியை யாரும் அப்படி அழைக்க வேண்டாம்! ராமதாஸ் பேட்டி
விழுப்புரம்: பாமகவின் தலைவர் நான்தான், விரைவில் கூட்டணி குறித்து நல்ல செய்தியை தருவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வரும் தேர்தல் கூட்டணி குறித்து நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அங்கு நடந்த பாமக செயற்குழு கூட்டத்திற்கு பின் அவர் பேசினார்.

அவர் கூறியதாவது: "பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்; இதுதான் 'சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி' என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்தக் கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக சீக்கிரமே நல்ல முடிவு அறிவிக்கப்படும். பாமகவின் தலைவர் நான்தான்.. அன்புமணி அல்ல. டெல்லி நீதிமன்ற தீர்ப்பின்படி, பாமகவின் சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை அன்புமணி உபயோகிக்க கூடாது.
அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு. ஊடகங்களும், கட்சியின் தலைவர் என அன்புமணி சொல்வதை அப்படியே போடுவது என வருத்தமளிக்கிறது. இனி கட்சியின் தலைவர் அன்புமணி என போட வேண்டாம்.
எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக.. தேர்தல் வாக்குறுதியில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மக்கள்தான் தீர்ப்பளிப்பார்கள். ஆனால், மக்கள் தான் உண்மையான எஜமானர்கள். அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானிப்பார்கள்." இவ்வாறு டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications