எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு
விழுப்புரம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எனக்கு நயன்தாரா வேண்டும் என்று சி.வி சண்முகம் கொச்சையாக பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக அரசை கண்டித்து அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.

ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்கிறார். கனவை சொன்னால் இவர் அதை நிறைவேற்றுவாராம். ஆம் எனக்கு நயன்தாரா வேண்டும். இவர் கனவை நிறைவேற்றுவாரா. நயன்தாராவை திருமணம் செய்து வையுங்கள் என யாராவது கேட்பார்கள். இவர் கனவை நிறைவேற்றிவிடுவாரா. ஆட்சியே போய்விட்டது.
ஆட்சி போன பிறகு வந்து கனவை நிறைவேற்றுவேன் என்கிறார். கடந்த 5 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என தெரியவில்லை என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் சி.வி சண்முகம் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதற்கு பெண்ணிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications