சாதிக் பாஷா கொலை வழக்கை மறந்திட்டீங்களா..ஸ்டாலின்? தெறிக்கவிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம்:கொடநாடு விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா கொலையை விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என்றும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியது. மேலும் அங்கிருந்த சில பொருள்களை அந்த கும்பல் திருடியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்துக்கு பின்னர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே கார் விபத்தில் இறந்தார். அதே நேரத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த சயன் என்பவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, அங்கிருந்த பொருள்களை திருடியது, ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் இறந்தது தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ ஒரு வீடியோ காட்சி தொகுப்பை டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
அந்த வீடியோ காட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்ததற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ காட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாகவும், வீடியோவை வெளியிட்ட மாத்யூ, அந்த விடியோவில் பேட்டியளிக்கும் சயன்,மனோஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை உண்மைநிலை என்னவென்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாஷா கொலையை விசாரிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என்றும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications