கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஜாமின் மறுப்பு
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமின் தர மறுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 12ம் தேதி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பள்ளி தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையாக மாறியது. தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து பேரும் புதன்கிழமையன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர்படுத்திய பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சூடுபிடித்த கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. ஜாமீன் கோரிய சக்தி பள்ளி தாளாளர்,மனைவி உள்ளிட்ட 5 பேர்
இந்நிலையில், பள்ளி தாளாளர் மூன்று பேர் ஆசிரியைகள் 2 பேர் ஆகிய ஐந்து பேரும் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு சின்னசேலம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் கேட்டிருக்கிறீர்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி புதிதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பார்கள். அதனை தாக்கல் செய்ய வேண்டும் அதன் அடிப்படையில்தான் மனுவை விசாரித்து ஜாமின் தரலாமா இல்லையா என்று முடிவுக்கு வரமுடியும் என்றார்.
Recommended Video
சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கையை இதோடு இணைத்து ஜாமின் கேளுங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.