மாற்றத்தை எதிர்பார்க்கும் மரக்காணம்.. திமுகவில் டென்சன்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவில் குழப்பம் விளைவிக்க நினைப்பவர்கள் மீது உடனடியாக கட்சி நடவடிக்கை பாயும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, விழுப்பரம், கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் உள்பட இந்த 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர், து தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடந்தது. இந்த மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களை மறைமுகமாக தேர்வு செய்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களை திமுகவே கைப்பற்றி உள்ளது. சில இடங்களில் அதிமுகவினரும் திமுக கவுன்சிலர்களை ஆதரித்து ஓட்டுபோட்டுள்ளனர்.

கட்சி தாவல் சட்டமில்லை
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சி தாவல் தடை சட்டப்படி வார்டு உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியாது என்பதால் யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம். ஆனால் கட்சிகள் , அவர்கள் மீது கட்சி சார்பான நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும். இதனால் பல அதிமுகவினர் திமுக கவுன்சிலர்களை ஆதரிப்பது நடக்கிறது. அதேநேரம் திமுகவிலும் சிலஇடங்களில் போட்டிகள் காரணமாக சண்டையும் நடக்கிறது.

மரக்காணம் தேர்தல்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றிய தலைவர் தேர்தலில் குழப்பம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றிய தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணன் போட்டியிடப்போவதாக அறிவித்ததால் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

தேர்தல் ஒத்திவைப்பு
இன்று நடைபெற இருந்த தேர்தலில் திமு சார்பில் இரண்டு பேர் போட்டியிடுவதாக தெரியவந்ததை தொடர்ந்து இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றனர் இதனிடையே சண்டை காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தலை தற்காலிகமாக ஒத்தி வைத்தார் அதனைத் தொடர்ந்து கண்ணன் ஆதரவாளர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி மஸ்தான்
இந்நிலையில் திமுக தலைமை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனை வேட்பாளராக அறிவித்ததற்கு கண்ணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்வதால் திமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது, திமுக தலைமையின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை ல் பாயும் என விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எத்தனை உறுப்பினர்கள்
இதனிடையே தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிராக கண்ணன் ஆதரவாளர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் மொத்தம் 26 கவுன்சிலர்கள் உள்ளார்கள். இவர்களில் திமுக 17 , விசிக -1, அதிமுக 3, பாமக 2, சுயேச்சை 3 என உறுப்பினர்கள் உள்ளனர். திமுக எளிதாக வெல்லும் என்கிற நிலையில் யார் தலைவர் ஆவது என்ற போட்டியால் மரணக்காணம் ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுக சிக்கலை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications