“அண்ணாமலை பாஜகவில் மாட்டி முழிக்கிறார்”.. உதயநிதியை விமர்சித்தால் அவ்ளோதான்! அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் சிக்கிக்கொண்டு முழித்து வருகிறார் என்று தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனங்களைக் கடந்து பயணிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கும் அமைச்சர் மஸ்தான், படித்து, பணிக்குச் சென்றதை கடந்து அண்ணாமலைக்கு அடிப்படை கொள்கை, லட்சியம் என்று எதுவுமே கிடையாது என விமர்சித்து உள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையில் உள்ள கிராமப்புற கோயில்கள் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக் கோயில்கள் திருப்பணித் திட்டத்தின் கீழ், திருக்கோயில் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நிதியுதவி வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெறுகிறது.
இதனை அடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற கோயில்களின் நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களுக்காக, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.

கோயில் நிர்வாகிகள் வழியனுப்பு விழா
இந்த நிலையில் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, சென்னை செல்லும் பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்.

அமைச்சர் மஸ்தான் பேட்டி
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நாகரீகத்தோடு வரவேற்கும் பண்பு
அப்போது பேசிய அவர், "பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும், அனைவரையும் நாகரீகத்தோடு வரவேற்கின்ற பண்பினை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு கற்றுக் கொடுத்து உள்ளனர். அவர்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

சி.வி.சண்முகம் மீது விமர்சனம்
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளுங்கட்சியை குறைகூறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், சி.வி.சண்முகம் நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். அவர் மட்டுமல்ல, அதிமுகவின் பண்பே அதுதான். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் ஆகும்.

உதயநிதியை விமர்சித்தால் பதிலடி
உதயநிதி ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்து வருபவர்களுக்கு காலப்போக்கில் தக்க பதிலடி கொடுக்கப்படும். அவர் கருணாநிதியின் பேரப்பிள்ளையாக இருந்தாலும், தமிழ்நாடு மக்களுடைய செல்லப்பிள்ளை ஆவார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனங்களைக் கடந்து பயணிக்க வேண்டும்.

அண்ணாமலை மாட்டிக்கொண்டு முழிக்கிறார்
அவர் படித்து, பணிக்குச் சென்றார். இதனை கடந்து அண்ணாமலைக்கு அடிப்படை கொள்கை, லட்சியம் என்று எதுவுமே கிடையாது. பாரதிய ஜனதா கட்சியில் சிக்கிக்கொண்டு அவர் முழித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி யாரையும் அச்சுறுத்தாது. நாங்களும் யாரையும் அச்சுறுத்த மாட்டோம்." என்றார்.












Click it and Unblock the Notifications