தெறிக்கவிடும் தவெக மாநாடு.. விஜய்க்காக உருவான பாடல் இன்று வெளியீடு.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. மாநாட்டையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய்க்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடல் இன்று (அக்டோபர் 27) வெளியிடப்படவுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் தீவிரமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. மாநாட்டில் லட்சக் கணக்கிலான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் மாலை 4 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டு மேடைக்கு வரவுள்ளார். பின்னர், 100 அடி உயர கொடிக் கம்பத்தில் நடிகர் விஜய் கட்சியின் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். கட்சிக் கொடி ரிமோட் மூலம் ஏற்றப்படவுள்ளது. மாநாட்டு மேடையில் இருந்து 600 மீட்டர் தூரத்திற்கு ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரேம்ப் வாக் பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்த பின்னர் மாநாடு தொடங்கவுள்ளது. மாலை 4 மணிக்கு மேல் தொடங்கும் இந்த மாநாடு இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டில் பேசி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இறுதியில் தவெக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜயின் இந்த முதல் அரசியல் மாநாடு தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேச போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி மாநாடு நடக்கும் பகுதியில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் 1500 பேர் அமரும் வகையில் நற்காலிகள் போடப்பட்டுள்ளன.
தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாடு நடக்கும் இடத்தில் குவிந்து வருகின்றனர். ஏராளமான வாகனங்களில் நேற்று முதலே மாநாட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டு, விஜய் கட்சியின் கொடியை வைத்து தொண்டர்கள் உற்சாகமாக விக்கிரவாண்டி நோக்கி செல்கின்றனர்.
மாநாட்டு திடலுக்குள் காலை 10 மணிக்கு மேல் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் காலை 7 மணிக்கே தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்துக்கும் அனுமதிக்கப்பட்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கான கொடியும், கொடிப் பாடலும் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தவெக தலைவர் விஜய்க்கான சிறப்பு பாடலும் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தலைவர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடல் இன்று (அக்டோபர் 27) வெளியிடப்படவுள்ளது. மண்ணை உயர்த்திட.. மக்களை உயர்த்திட.. வந்தார் நேர்மையான தலைவர்... என்று இப்பாடல் தொடங்கவுள்ளது. இந்தப் பாடலில் தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் வெற்றித் திலகம் என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications