தைலாபுரத்தில் ராமதாஸின் 60வது திருமண விழா.. ஆஜரான மகள்கள், பேரன், பேத்தி! மிஸ்ஸான அன்புமணி, செளமியா!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் 60வது திருமண நாளை நேற்று தைலாபுரத் தோட்டத்தில் கொண்டாடினர். இதனையொட்டி அவரிடம் வாழ்த்து, ஆசி பெறுவதற்காக அவரது மகள்கள் வந்த நிலையில், அன்புமணி மற்றும் செளமியா ஆகியோர் மிஸ்ஸாகி இருக்கின்றனர். இது பாமகவில் பேசுபொருளாகி இருக்கிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று நினைத்த போதே, மகன் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தொடங்கிய முதல், தற்போது உச்சத்தில் இருக்கிறது. இதனால் பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸை நீக்கிவிட்டு, தானே அந்த பதவியை எடுத்து கொண்டார்.

ராமதாஸ் vs அன்புமணி
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பாமக தலைவர் பதவி அன்புமணிக்கு வழங்கப்படும் என்று கூறி வந்த ராமதாஸ், திடீரென என் கடைசி மூச்சு இருக்கும் வரை தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன் என்று ஆவேசமாக கூறி இருக்கிறார். அன்புமணியும் அதற்கேற்ப நிர்வாகிகளை நீக்குவது, நடைபயணம் செல்வது, சீனியர்களை பொதுக்குழுவில் வைத்து கலாய்ப்பது என்று பதிலடி கொடுத்து வந்தார்.
செளமியா மீது விமர்சனம்
அதேபோல் ராமதாஸிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அதேபோல் அன்புமணியின் மனைவி செளமியா மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அவர் பாமகவில் தலையிடுவதையும், தேர்தலில் போட்டியிடுவதையும் ராமதாஸ் விரும்பவில்லை. இந்த விவகாரமும் பாமகவில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
60வது திருமண நாள்
தற்போது பாமகவில் அமைதியான சூழலில் நிலவி வரும் நிலையில், அடுத்ததாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் தங்களின் 60வது திருமண நாளினை கொண்டாடி இருக்கின்றனர்.
தைலாபுரம் வந்த மகள்கள்
இவர்களிடம் வாழ்த்து கூறி ஆசீர்வாதம் பெறுவதற்காக ராமதாஸின் மகள்களான காந்திமதி மற்றும் கவிதா ஆகியோர் வந்துள்ளனர். அதேபோல் அவர்களின் மகன்கள், மகள்களையும் அழைத்து வந்துள்ளனர். இதனை மொத்தமாக ஒரு புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் ராமதாஸின் 60வது திருமண விழாவில் அன்புமணி - செளமியா குடும்பத்தினர் பங்கேற்கவில்லை.
மிஸ்ஸான அன்புமணி
இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி, செளமியா இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி அன்புமணி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காகவாது ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசுவாரா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications