பாமக கூட்டம்.. தேயும் தைலாபுரம்.. இரண்டாவது நாளாக புறக்கணித்த அன்புமணி
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸின் அழைப்பை மாவட்ட நிர்வாகிகள் நேற்று புறக்கணித்திருந்தனர். இந்நிலையில் தைலாபுரத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை அன்புமணி இரண்டாவது நாளாக இன்றும் புறக்கணித்துள்ளார்.
பாமகவில் உள்கட்சி பிரச்னை பூதாகரமாகி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு பொது வெளியிலேயே அம்பலமாகிவிட்டது. ராமதாஸின் பேரன் (மகளின் மகன்) முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டதில் மோதல் வெடித்தது. இதில் தந்தை, மகனுக்கு மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ராமதாஸ், "இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதுதான் முடிவு இனி பாமகாவின் தலைவராகவும் நானே செயல்படுவேன்." என்று அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி, "பாமக நிர்வாகிகளால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட நான் தான் கட்சியின் தலைவர்." என்று கூறினார்.
வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு மாமல்லபுரம் அருகே கடந்த மே 11 ஆம் தேதி நடைபெற்றது. ராமதாஸ், அன்புமணி ஒரே மேடையில் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியிலும் ஈகோ வெடித்தது. மாநாட்டில் முகுந்தனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.
2024 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 2026 தேர்தல் கூட்டணி வரை ராமதாஸ், அன்புமணி இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருவதாக கூறப்படுகிறது. மாநாட்டில் பேசிய ராமதாஸ், "தேர்தல் கூட்டணியை நான் தான் முடிவு செய்வேன்." என்று கூறியிருந்தார். அன்புமணி பேசும்போது, "என் பின்னால் வாருங்கள். நாம் ஆளும் நேரம் வந்துவிட்டது." என்றார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில், நேற்று பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதில் ஜிகே மணி உள்ளிட்ட 10க்கு குறைவான நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் தைலாபுரத்தில் இரண்டாவது நாளாக இன்று இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அன்புமணி ராமதாஸ் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். நேற்று சுமார் 10 நிர்வாகிகள் மட்டுமே வந்த நிலையில், தைலாபுரத்தில் நடக்கும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சுமார் 20 நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ராமதாஸ், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். ஆனால் அவரின் கருத்தை பாமகவினரை ஏற்காமல் விமர்சித்து வருகிறார்கள்.
மறுபக்கம் இதை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம், குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து, குழப்பம் நிலவுகிறது. இதில் இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் வெற்றி பெற முடியும். முதலில் பாமகவுக்குள் இருக்கும் பிரச்னைகளை தீர்த்துவிட்டு வெற்றி, தோல்வி குறித்து பேச வேண்டும். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications