10.5% இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்.. விழுப்புரத்தில் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த அன்புமணி!
விழுப்புரம்: வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மறுப்பதை கண்டித்து அன்புமணி தலைமையில் பாமக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக நடத்தியதன் மூலமாக ஒரே கல்லில் அன்புமணி 3 மாங்காயை அடித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக மோதி வருகின்றனர். அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து இறக்கியதோடு, செளமியா அன்புமணியை கடுமையாக ராமதாஸ் விமர்சித்தார். இன்னொரு பக்கம் அன்புமணி மொத்தமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து பாமகவை கையில் எடுக்க ஆயத்தமாகி வருகிறார்.

இதனிடையே ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில் அவரின் மகள் காந்திமதி கலந்து கொண்டதும் விவாதப் பொருளாக மாறியது. அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தவும் ராமதாஸ் தரப்பு தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அன்புமணி பிடியில் இருந்து பாமக கை நழுவி செல்வதாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி, விழுப்புரத்தில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதலுக்குப் பின் பாமக நடத்தும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்புமணிக்கு பாமக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் ஆயிரக்கணக்கான பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக அன்புமணி ஒரே கல்லில் 3 மாங்காயை அடித்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதன் மூலமாக ராமதாஸ் தரப்புக்கு, கட்சிக்குள் தன்னுடைய பலத்தை அன்புமணி நிரூபித்துவிட்டதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுகவுக்கு எதிரான பாதையில் பாமக இருப்பதை அன்புமணி வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
இதன் மூலமாக அதிமுகவுக்கு தங்களின் கூட்டணி நிலைப்பாட்டையும் மறைமுகமாக அன்புமணி கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்களிடையே பாமகவின் இடம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கூறி இருக்கிறார். இதனால் பூம்புகார் மாநாடு மூலமாக ராமதாஸ் தனது பலத்தை நிரூபிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications