இறுதி முடிவை எடுப்பதில் சிக்கல்.. பாமக ராமதாஸ் அணி யாருடன் கூட்டணி? ஜிகே மணி அப்டேட்!
விழுப்புரம்: சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ ஜிகே மணி தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று கூறிய ஜிகே மணி, தமிழ்நாட்டில் ராமதாஸ் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் சட்டசபைத் தேர்தலில் இரு தரப்பும் தனித்தனியாக போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே பாமக அன்புமணி தரப்பு அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவினர் திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் தரப்பில் திருமாவளவன் ஒப்புக்கொண்டால் மட்டுமே கூட்டணியில் இணைப்போம் என்பதை தெளிவாக கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் அதிமுக பக்கம் அன்புமணி சென்றுவிட்டதால், தலித் மக்களின் ஆதரவு வாக்குகளை இழக்க திமுக தயாராக இல்லை. இதனால் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைவது மிகவும் கடினம் என்றே பார்க்கப்படுகிறது.
இதனால் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி அமைப்பதில் சில சிக்கலை சந்தித்து வருகிறது. என்டிஏ கூட்டணியிலேயே இணைந்துவிடலாமா அல்லது தவெகவுடன் செல்லலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் தைலாபுரத்தில் தங்கள் தரப்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ராமதாஸ் நேர்காணல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ராமதாஸ் பாமக ஆதரவு எம்எல்ஏ ஜிகே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எல்லா தரப்புடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் வரும் போது ஒவ்வொரு நபரும் ஒரு கருத்தை சொல்வார்கள். இப்படியான சூழலில் யாருடனும் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது.
பாமக இப்போதும் வலிமையான சக்தியாக உள்ளது. ராமதாஸ் வலிமை குறையாது. இதனால் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். 21 ஆண்டுகளாக வரைவு நிதிநிலை அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டு வருகிறார். அமைச்சர் எவ வேலுவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த தகவல் கற்பனை தான். பாமகவில் ஒரு நெருக்கடி நிலை உருவாகிவிட்டது.
ராமதாஸ், அன்புமணி இடையில் பிரிவு ஏற்பட்டதற்கு ஜிகே மணி தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்களை இணைக்க 5 மாதங்களாக முயற்சி செய்தேன். அன்புமணி வந்து ராமதாஸை சந்தித்து ஒன்றாக இருக்கலாம் என்று கூறினால், நான் தடையாக இருப்பேனா.. நாங்கள் கனத்த இதயத்துடன் இப்போது செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications