மகள் காந்திமதிக்கு பதவி கொடுப்பீர்களா? பாடல் பாடி ராமதாஸ் பதில்.. செளமியா அன்புமணிக்கும் குட்டு!
விழுப்புரம்: பாமகவில் மகள் காந்திமதிக்கு பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். குடும்பப் பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொன்னதை மீறி ஏற்கனவே வந்துவிட்டார்கள் என்று கூறிய ராமதாஸ், மகளிர் மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு, தலைவர் பொறுப்பை தாமே எடுத்து கொண்டார். அதேபோல் அன்புமணி ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்தார்.

பாமக மேடையில் காந்திமதி
தொடர்ந்து புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டத்தையும் ராமதாஸ் நடத்தினார். அந்த செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி பங்கேற்றிருந்தார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த காந்திமதியை அழைத்து, பாமக நிர்வாகிகள் மேடையில் அமர வைத்தனர். அவருக்கு ராமதாஸிற்கு பின் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டது.
அன்புமணி vs காந்திமதி
தனது குடும்பத்தில் இருந்து பெண்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் என்பதே விருப்பம் என்று கூறி வந்த ராமதாஸ், தற்போது திடீரென மகள் காந்திமதியை மேடையேற்றி இருப்பது பேசுபொருளாகியது. இதனால் மகன் அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் மகளை நிறுத்துகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இன்னொரு பக்கம் செளமியா அன்புமணிக்கு காந்திமதி மூலமாக செக் வைக்கிறாரா என்ற விவாதமும் தொடங்கியது.
ராமதாஸ் கடிதம்
இதனிடையே பாமக தலைவர் விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். மே 28ஆம் தேதியுடன் பாமக தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக சார்பாக அடுத்ததாக நடக்கவுள்ள மகளிர் மாநாட்டில் ராமதாஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
ராமதாஸ் பேட்டி
இந்த நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்த போது, குடும்ப பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றீர்கள்.. ஆனால் செயற்குழுவில் காந்திமதி கலந்து கொண்டாரே என்ற கேள்விக்கு, குடும்ப பெண்கள் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டார்களே.. செயற்குழு கூட்டத்திற்கு முன்பாகவே பெண்கள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.. தற்சமயம் காந்திமதிக்கு எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை.
செளமியா அன்புமணிக்கும் குட்டு
"போகப் போக தெரியும்" என்றும் பாடல் பாடி பதில் அளித்தார். இதன் மூலமாக மறைமுகமாக செளமியா அன்புமணி அரசியலுக்கு வந்துவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் தற்சமயம் காந்திமதிக்கு பதவி இல்லை என்று கூறியதன் மூலமாக, விரைவில் காந்திமதிக்கு ராமதாஸ் பதவி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications