வடிவேல் ராவணனை கண்டுபிடித்தால் ரூ.100 பரிசு.. பிரஸ் மீட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்!
விழுப்புரம்: "பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு" என தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலாக கூறியுள்ளார்.
பாமக உட்கட்சி பிரச்சினையின் போது அன்புமணியை முதலில் ஆதரித்து பேசிய பாமக பொருளாளர் திலகபாமாவை கண்டித்தவர் வடிவேல் ராவணன். சில நாட்களில் அன்புமணிக்கு ஆதரவாக இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து கலந்து கொண்டனர்.

பாமக அதிகார மோதல் உச்சகட்டம்
பாமகவில் அதிகார மோதல் உச்சகட்டத்தில் உள்ளது. அண்மையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பாமக தலைவர் என்று அறிவித்தார். இதனால், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியானதும், பா.ம.க பொருளாளர் திலக பாமா, கட்சியில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என்று அன்புமணிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு எதிர்வினையாற்றிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், "திலக பாமா நன்றியுணர்ச்சி இல்லாமல் பேசுகிறார், அவர் பதவி வில வேண்டும்" என்று வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தார்.
அன்புமணியுடன் சேர்ந்த வடிவேல் ராவணன்
அதன்பிறகு பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் அதிகரித்து, இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ராமதாஸ் நடத்திய ஆலோசனைகளில் பங்கேற்கவில்லை.

அன்புமணி ராமதாஸ், சோழிங்கநல்லூரில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல் நாளில் பங்கேற்காத வடிவேல் ராவணன், இரண்டாவது நாளில் பங்கேற்றார். அதேசமயம், ராமதாஸ் நடத்திய ஆலோசனையில் பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
வடிவேல் ராவணனை கண்டுபிடித்தால் பரிசு
இந்நிலையில் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அதோடு, "பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன்" என்றும் ராமதாஸ் கிண்டலாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications