விழுப்புரம் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது?.. மாநில மகளிர் ஆணையம் சொல்வது என்ன?
ஆசிரமத்தில் வன்கொடுமை எப்படி நடந்தது என்பது குறித்து மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை எப்படி நடந்தது என்பது குறித்து மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஜவாஹிருல்லா என்பவர் காணாமல் போனார். அவரை மீட்டு தரும்படி அவருடைய மருமகன் சலீம்கான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஆசிரமத்தில் போலீஸார், வருவாய் துறை, சமூகநலன் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்கள் காத்திருந்தன.

போதை ஊசி
ஆசிரமத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. பெண்களுக்கு போதை ஊசி போடப்பட்டு அவர்கள் மயங்கியவுடன் பாலியல் அக்கிரமங்கள் நடந்துள்ளன. ஒருவேளை எந்த பெண்ணாவது பாலியல் இச்சைக்கு இணங்காவிட்டால் அவர்களை இருட்டு அறையில் அடைத்துவிடுவார்களாம்.

குரங்குகளை விட்டு கடிக்க விடுவர்
அங்கு நிறைய குரங்குகளை விட்டு கடிக்க விடுவார்களாம். இப்படிப்பட்ட கொடுமைகள் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி, அவரது மனைவி மரியா ஜீபின் , ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆசிரம நிர்வாகி ஜீபினின் பாலியல் வக்கிரமங்களுக்கு அவரது மனைவியும் உடந்தை என்பது வேதனையிலும் வேதனை.

விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி நேரில் விசாரணை நடத்தினார்.

ஆசிரமத்தில் இருந்து மீட்பு
அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் ஆசிரமத்தில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நல்ல நிலையில் உள்ளவர்கள், மாவட்டத்தில் செயல்படும் மற்ற இல்லங்களில் மாற்றப்பட்டுள்ளனர்.

54 பெண்கள்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசிரமத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்ட 2 பெண்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கூடுதலாக அரசு மனநலக் காப்பகங்களை அமைக்க பரிந்துரை செய்யப்படும். இந்த விசாரணை அறிக்கை சிபிசிஐடி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்.

8 பேர் கைது
இதுவரை ஆசிரம உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆணையம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடமும் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என குமார் தெரிவித்தார். இதனிடையே ஜவாஹிருல்லாவின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இந்த வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜீபின் பேபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு விளக்கத்தை ஜீபினிடம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜுபின் மற்றும் கேரளாவை சேர்ந்த மேலாளர் விஜி மோகன் மற்றும் தாஸ், விழுப்புரத்தை சேர்ந்த பூபாலன் தெலுங்கானாவைச் சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications