உயிருக்குப் போராடும் தாயின் கடைசி ஆசை.. தாய்மாமன் மகளை கரம் பிடித்த இளைஞர்.. நெகிழ்ச்சி சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தாய்மாமன் மகளைத் திருமணம் செய்து தாயின் கடைசி ஆசையை மகன் நிறைவேற்றினார்.
விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்தவர் தயாளன், 40. இவர் பனையபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் 67 வயதாகும் இவரது தாய் முத்தாலம்மாளுக்கு, கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தாய்க்கு கொரோனா
இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். முத்தாலம்மாளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதால், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது மகன் தயாளனுக்குக் கடைசி வரை திருமணம் செய்து பார்க்க முடியாமல் போய்விட்டதே என முத்தாலம்மாள் வேதையனையுடன் புலம்பியுள்ளார்.

கடைசி ஆசை
இதை கேட்ட மகன் தயாளன், தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் தனது தாயைப் பார்க்க வந்திருந்த தாய்மாமன் ஏழுமலை என்பவரின் மகள் காயத்திரியைத் திருமணம் செய்து கொள்ள உறவினர்கள் மத்தியில் பேசி முடிவு செய்தார். இதையடுத்து மருத்துவமனை உள்ள ஒரு கோயிலில் மணமகள், மணமகள் மாலை மாற்றிக் கொண்டனர்.

மருத்துவமனையில் திருமணம்
அம்மன் முன்னிலையில் மணமகள் காயத்திரி கழுத்தில் தாலி கட்டி, குங்குமம் இட்டார் தயாளன். புதுமனத்தம்பதிக்கு மணமக்களுக்கு உடனிருந்த நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த திடீர் திருணம் பற்றிய தகவலறிந்த மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்களும் புதுமண தம்பதியினரை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு தாயிடம் ஆசீர்வாதம் வாங்க மருத்துவமனைக்கு மணமக்கள் சென்றனர்.

பொதுமக்கள் வாழ்த்து
இருப்பினும், முத்தாலம்மாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுமணத் தம்பதியை வார்டினுள் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் திருமணம் குறித்த தகவலைத் தாயிடம் தெரிவிக்குமாறு அங்கிருந்த செவிலியர்களிடம் கூறிவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மருத்துவமனையில் நடைபெற்ற இந்த திடீர் திருமணத்தால், அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், மணமக்களை அங்கு வந்த பொதுமக்கள் அனைவரும் வாழ்த்திச் சென்றனர்.












Click it and Unblock the Notifications