பிரச்சாரத்தை முடித்துவிட்டு நேராக விழுப்புரத்துக்கு போன ஸ்டாலின்.. புகழேந்தி உடலுக்கு நேரில் அஞ்சலி!
விழுப்புரம்: சிதம்பரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துவிட்டு நேராக விழுப்புரம் சென்ற முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும், கட்சிப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரை பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக டிஸ்சார்ஜ் ஆகி விழுப்புரம் வந்தார் புகழேந்தி.
விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்ட மேடையிலேயே புகழேந்தி மயக்கம் அடைந்த நிலையில், உடனடியாக அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் இன்று காலை காலமானார். புகழேந்தி மறைந்த செய்தி அறிந்த அமைச்சர் பொன்முடி உடனே அங்கு விரைந்து வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
புகழேந்தி உடல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திமுகவினர் எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக எம்.எல்.ஏ மறைவால் கலங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில், "புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு மிகவும், அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் திமுகவின் வெற்றிக்காகத் தேர்தல் பணியாற்றி வந்தார்.
என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்கு சென்றார். நானும் உடனே மருத்துவர்களை தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனிக்க கேட்டுக் கொண்டிருந்தேன். நலம் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த சூழலில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோருக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு நேராக காரில் விழுப்புரத்திற்கு புறப்பட்டார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் கேஎன் நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி கணேசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி ஆகியோரும் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நாளை புகழேந்தியின் சொந்த ஊரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications