இந்தி திணிப்பால் தமிழ் அழியும்.. வேலைவாய்ப்பு குறையும்.. நிர்வாகிகள் கூட்டத்தில் பொன்முடி ஆவேசம்!
விழுப்புரம்: தமிழ்நாட்டில் இந்தியை கொண்டு வந்தால், தமிழ் மொழி அழிந்துவிடும் என்றும், நமக்கு நாமே அடிமையாகும் நிலை வரும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அண்மைக் காலமாக திமுக - பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தி திணிப்பு விவகாரம், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம், ஆளுநர் விவகாரம் என இரு கட்சியினர் இடையிலான காரசார விவாதம் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது.
திமுகவின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாஜகவுக்கு எதிராக திமுக சார்பில் இந்தி திணிப்பு விவகாரத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கட்சியினர் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
7 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. 4ல் வெற்றிபெற்ற பாஜக.. தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
இந்தி திணிப்பு
இதனால் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் இந்தி திணிப்பு தீர்மான பொதுக்கூட்டங்களில் ஆவேசமாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கட்சி நிகழ்ச்சியிலும் அமைச்சர் பொன்முடி இந்தி திணிப்புக்கு எதிராக பேசியுள்ளார். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி எம்எல்ஏ-வுமான புகழேந்தி தலைமை தாங்கினார்.
உதயநிதி ஸ்டாலின்
இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்றார். அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில், வரும் 27ம் தேதி இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
தமிழ் அழிந்துவிடும்
அன்றைய தினம் ரத்தான முகாம் விழுப்புரம் கலைஞர் அறிவாலத்தில் நடைபெற உள்ளது. அதேபோல் ஹிந்தி திணிப்பை கண்டித்து துண்டறிக்கையை பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஹிந்தி திணித்தால் தமிழ் அழிந்துவிடும். அதுமட்டுமல்லாமல் நமக்கு நாமே அடிமையாகும் நிலை வரும். வேலைவாய்ப்பு கிடைக்காது, புதிய திட்டங்கள் எதுவும் வராது என்று தெரிவித்தார்.
தமிழ், ஆங்கிலம்
தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளே போதுமானது. கேரளா, கர்நாடகா மாநிலங்கள், ஏன் வெளிநாடுகளுக்கு கூட செல்ல முடியும். ஆனால் மத்திய அரசு, நமது பாடத்தில் இந்தி திணிக்கை முயற்சித்து வருகிறார்கள். ஆகையால் இந்தி திணிப்பு குறித்து இளைஞர்களுக்கு புரியும் படி, சாதக பாதகங்களை திமுகவினர் எடுத்து சொல்ல வேண்டும். இந்தியை திணிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.