பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியை மே 23 -க்கு பிறகு வெளியிடுவேன்.. டிடிவி தினகரன் பகீர்
கள்ளக்குறிச்சி: மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று கூறிய கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.முக வேட்பாளர் கோமுகி மணியனை ஆதரித்து சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய தினகரன், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 8 வழி சாலை திட்டத்தால் சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர் என்றார்.
இது போன்று மக்களை வஞ்சிக்கும் திட்டங்களை ஆளும் கட்சியினர் கொண்டு வந்து மக்களை பல வழிகளில் பாதிப்படைய செய்துள்ளனர். மீண்டும் இவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்தால், மக்களை பாதிக்கும் திட்டங்களையே நிறைவேற்ற முன்வருவார்கள் என்றும் கூறினார்.
நடைபெறவுள்ள இடைதேர்தலில் 8 தொகுதியிலாவது அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.