விழுப்புரத்தில் ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்.. 160 படுக்கைகள் தயார்!
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் 10 ரயில் பெட்டிகள் கொரோனா வாா்டாக மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதியாக, நாடு முழுவதிலும் ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வாா்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.


தமிழகத்தில் சென்னை, பெரம்பூா், திருச்சி பொன்மலை ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகளை கொரோனா வாா்டாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு ரயிலில் உள்ள 10 பெட்டிகளிலும், சுகாதார குழுவினர் மூலம் நோயாளிகள் படுக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கும் 4 கழிப்பறைகளில் 2 குளியல் அறைகளாகவும், 2 கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு கேபினுக்கும் திரைச்சீலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜன்னல்களில் கொசு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமைப்படுத்தும் பகுதியிலும் குப்பைத் தொட்டிகள், தண்ணீா் பாட்டில்கள் வைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பெட்டியிலும் 16 பேர் தங்குவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமுள்ள 10 பெட்டிகளில் 160 பேர் வரை தங்கி சிகிச்சை பெறலாம். இந்த பெட்டிகளில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் ரயில் பெட்டிகளை, கொரோனா சிறப்பு வார்டாக மாற்றி அனுப்பும் பணி விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.













Click it and Unblock the Notifications