கட்சி தலைவர் டூ பாஜகவில் சாதாரண உறுப்பினர்.. ஏன் இந்த முடிவு? முதல் முறை சீக்ரெட் உடைத்த சரத்குமார்
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைத்தது ஏன் என்றும், கட்சி தலைவரில் இருந்து சாதாரண உறுப்பினராக ஆவதற்கு என்ன காரணம் என்றும் கூறினார். மேலும் பாமக வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்றும் சரத்குமார் கூறினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தவர் சரத்குமார். கடந்த 2007 ஆம் ஆண்டு சரத்குமார் இந்த கட்சியை தொடங்கினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் சரத்குமார் கட்சி வெற்றி பெற்றது.

தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் உட்கட்சிப் பூசல்களால் அவரது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் தனது கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.
சரத்குமாருக்கு பாஜகவில் பெரிய அளவில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படைவில்லை. அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கி தோல்வி அடைந்தார். தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளருக்க்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் சரத்குமார் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் போது தான் பாஜகவில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாகவும் விளக்கம் அளித்துள்ளார். சரத்குமார் கூறியதாவது:-
நான் 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறேன். 16 ஆண்டு காலம் சமத்துவ மக்கள் கட்சியை வழிநடத்தி இருக்கிறேன். காலத்தின் கட்டாயம் அப்படி சொல்லும் போது, இந்த முடிவை எடுத்தோம். நாடு வல்லரசாக உருவாகிக்கொண்டு இருக்கிறது. நாடு வல்லரசு ஆவதற்கு நாமும் ஏன் கை கொடுக்க கூடாது என்று தான்.. பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கும் நாம் முதல் இடத்திற்கு வருவதற்கு, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாரத தேசத்தை முதன்மை நாடாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் என் இயக்கத்தை பாஜகவோடு இணைத்திருக்கிறேன்.

இப்போது சாதாரண உறுப்பினராக இருக்கின்றேன். ஒரு கட்சியின் தலைவராக இருந்துவிட்டு தற்போது பாஜகவில் சாதாரண உறுப்பினராக இருக்கிறேன் என்றால் இந்த கட்சியின் மீது, பாஜகவின் மீது, பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் தான் நான் இப்படிப்பட்ட முடிவை எடுத்து இருக்கிறேன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியாகி இருக்கிறார்கள். இன்னும் 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் அதை பற்றி இன்னும் அரசு சொல்லவில்லை. கள்ளக்குறிச்சியில் 67 பேர் இறந்திருக்கிறார்கள். இன்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். மனைவியை இழந்துவிட்டார்கள். பலர் கணவர்களை இழந்துவிட்டார்கள். பிள்ளைகள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. கள்ளக்குறிச்சியில் அரசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து இருக்குமா என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவினால் என்னற்ற குற்றங்கள் அரங்கேறுகின்றன. மகன் தாயை கொலை செய்கிறான். தந்தையை கொலை செய்கின்றான். ஒரு தந்தை போதை போட்டுக்கொண்டு மகனை கொலை செய்கிறான். இது எல்லாம் நடக்கிறதா இல்லையா?
இந்த நிலைமை எல்லாம் மாற வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். மோடி ஆட்சி வரவேண்டும். தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லாத போதும் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த தொகுதிக்கு நல்ல மாற்றம் வர வேண்டும் என்றால் அன்புமணியின் பாமகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து காலியாக இருந்த விக்கிரவாண்டி சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் ஜூலை 10-ம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தது. இதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications