“பேசிட்டு இருக்கும் போதே.." மெல்ல நகர்ந்த கார்.. உச்சக்கட்ட டென்ஷனான தவெக புஸ்ஸி ஆனந்த்.. பரபரப்பு
விழுப்புரம்: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கிடையே இன்று மாநாடு பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டென்ஷன் ஆகிவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவும் நிலையில், இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ளார். இப்போது ஹெச் வினோத் இயக்கத்தில் படத்தில் நடித்து வரும் விஜய், அவ்வப்போது தனது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

புஸ்ஸி ஆனந்த் கோபம்: அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளன. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டென்ஷனாகிவிட்டார்.
அதாவது மாநாடு பணிகள் குறித்து செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர், "மாநாடு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. நாம் அடிக்கடி சென்றால் அதுவே தொந்தரவு போல ஆகிவிடும். நீங்களே பார்க்கலாம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொருவருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளோம். அவை எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறது" என்றார்.
அப்போது மாநாட்டிற்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பணிகள் எப்போது முடிவடையும் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் சொல்லும் முன்பே டிரைவர் மெல்லக் காரை இயக்க தொடங்கினார். உடனே காரை நிறுத்துமாறு சைகை காட்டிய அவர், எல்லா வேலைகளுமே கிட்டதட்ட முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
பயங்கர கோபம்: விழா ஏற்பாடுகளைப் பார்க்க விஜய் நேரில் வருவாரா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளிக்கத் தொடங்கும் போதே மீண்டும் டிரைவர் காரை எடுத்துவிட்டார். இதனால் செம டென்ஷன் ஆன புஸ்ஸி ஆனந்த், "கொஞ்சம் நிறுத்தரயா.. சிட்டு இருக்கும் போதே வண்டி எடுக்குற" என்று டிரைவரிடம் கடிந்து கொண்டார்.
சில நொடிகள் டிரைவரை முறைத்த புஸ்ஸி ஆனந்த் பிறகு செய்தியாளர்களிடம், "பணிகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. காரில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன்" என்று தெரிவித்தார்.
சிசிடிவி: மேலும், மாநாட்டுப் பணிகள் குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், "மாநாட்டிற்கான எல்லா பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. தடுப்புக்களை எல்லாம் போலீசார் எப்படிச் சொல்கிறார்களோ, அதன்படி வைத்து வருகிறோம்.. தேவையான இடங்களில் சிசிடிவி கேமராவும் அமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எத்தனை பேர் வருவார்கள் என்ற விவரங்கள் அந்தந்த மாவட்ட தலைவர்களே போலீசாரிடம் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாமே போலீஸ் அறிவுறுத்தல்படியே செய்து வருகிறோம். விஜய் அறிவுறுத்தலின்படி தண்ணீர், கழிவறை என எல்லாமே பொதுமக்கள் வசதிக்காகச் செய்து தரப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
கட் அவுட்: மேலும், இப்போது மாநாடு நடக்கும் இடத்தில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோர் கட்அவுட் உடன் விஜய் கட்அவுட்டும் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த தலைவரின் கட் அவுட்கள் இதில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, இப்போது வரை இந்த தலைவர்களின் கட் அவுட் மட்டுமே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications