உளுந்தூர்பேட்டையில்.. ஊருக்கு நடுவே மனித மண்டை ஓடு! அச்சத்தில் உறைந்த மக்கள்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தில் ஊருக்கு நடுவிலும், ஊரை சுற்றியும் சாலைக்கு நடுவே மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரியப்பட்டு கிராமத்திற்கு மூன்று வழிப்பாதை எல்லையாக இருக்கிறது. இந்த கிராமத்தின் எல்லையில் அரிகர புத்திர அய்யனார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலை தாண்டிதான் ஊருக்குள் போக முடியும்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஊரிலிருந்து மக்கள் வேலைக்காக வெளியே போக வந்திருக்கின்றனர். அப்போது மூன்று வழிப்பாதையில் மஞ்சள், குங்குமம் கொட்டப்பட்டு அதில் மண்டை ஓடு வைக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து அச்சமடைந்த மக்கள் ஊரை விட்டு வெளியே போகாமல் இருந்திருக்கின்றனர். பின்னர் வயல் வழியாக ஊருக்கு வெளியே சென்று போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
விசாரணையில் மூன்று இடங்களிலும் மண்டை ஓடு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மண்டை ஓட்டை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாகவே எங்க ஊருல அமானுஷ்யமான சம்பவங்கள் நடந்துட்டு இருக்கு. திடீர் காய்ச்சல், திடீர் மரணம் ஏற்படுது. இந்த சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பேய் ஓட்டுவதாக சொல்லி சடங்குகள் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன. பல பழமையான கலாச்சாரங்களில், மூதாதையர்களின் மண்டை ஓடுகளைப் பாதுகாத்து, அவர்களை வணங்குவது ஒரு சடங்காக இன்றும் தொடர்ந்து வருகிறது. இது மூதாதையர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும், அவர்களின் ஞானத்தைப் போற்றுவதற்கும் மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது. வேறு சில சமுதாயங்களில், மண்டை ஓடு இறந்தவரின் ஆன்மாவைச் சேமித்து வைப்பதாக நம்பப்படுகிறது.
மட்டுமல்லாது மரணம் மற்றும் மறுபிறவிக்கான அடையாளமாகவோ அல்லது சக்தி வாய்ந்த ஆன்மாக்களை அழைப்பதற்கான ஒரு கருவியாகவோ மண்டை ஓடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இதெல்லாம் மூடநம்பிக்கையின் வெளிப்பாடுதான். மண்டை ஓடு ரோட்டில் கிடந்தால் அதை கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். இதை பார்த்து பயந்தால் கதை நடக்காது என்று பலரும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications